கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான காலிறுதிக்கு இணையான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணில் உலகக் கோப்பையை விட்டு வெளியேறும் அபாயத்தில் இருந்த இந்திய அணியை, தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தின் மூலம் தனி ஆளாக மீட்டெடுத்துள்ளார். மேலும் விராட் கோலி மட்டுமே செய்து இருந்த முக்கிய சேஸிங் சாதனை ஒன்றை சஞ்சு சாம்சன் முறியடித்து இருக்கிறார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை விட்டே வெளியேற வேண்டும் என்ற மிகப்பெரிய நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், 196 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரைக் குவித்தது. அந்த அணியின் ரோஸ்டன் சேஸ் 40 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 37 ரன்களும், ரோவ்மன் பவல் 34 ரன்களும் குவித்து இந்திய பந்துவீச்சாளர்களுக்குக் கடும் சவால் அளித்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
196 ரன்கள் எடுத்தால் மட்டுமே அரையிறுதி என்ற இமாலய அழுத்தத்துடன் களமிறங்கிய இந்திய அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா 10 ரன்களிலும், இஷான் கிஷன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் 4.3 ஓவர்களில் 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இந்த நெருக்கடியான கட்டத்தில் மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் எந்தவித பதற்றமும் இன்றி மிக நேர்த்தியாகவும், அதேசமயம் ஆக்ரோஷமாகவும் விளையாடினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் வெளியேறினாலும், அவருடன் இணைந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பின்னர் வந்த திலக் வர்மா 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து சாம்சனுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். இவர்களது கூட்டணி 42 ரன்களைச் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா 17 ரன்களில் ஆட்டமிழந்தாலும், சாம்சன் தனது பொறுப்பான ஆட்டத்தைக் கைவிடவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிகளுக்கு விரட்டிய சஞ்சு சாம்சன், 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 97 ரன்களைக் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். டி20 உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில், அதுவும் வாழ்வா சாவா ஆட்டத்தில் சேஸிங் செய்யும்போது அழுத்தத்தைத் தாங்கி அவர் ஆடிய இந்த இன்னிங்ஸ் காலத்திற்கும் நினைவுகூரப்படும். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் விராட் கோலியின் மாபெரும் சாதனையையும் சஞ்சு சாம்சன் முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இறுதியில் சிவம் துபே 8 ரன்களுடன் களத்தில் இருக்க, இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை எனும் நிலையில் முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடுத்து வெற்றியை உறுதி செய்தார் சாம்சன்.

சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்குச் செல்லாமல் வெளியேறிவிடும் என விமர்சித்தவர்களுக்குச் சஞ்சு சாம்சனின் இந்த ஒற்றை இன்னிங்ஸ் தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது. அழுத்தம் நிறைந்த போட்டியில் சஞ்சு சாம்சன் காட்டிய பொறுமையும், அதிரடியும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இருந்து இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.