கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன். வெற்றி ரன்னை அடித்த பிறகு அவர் மண்டியிட்டுச் செய்த உணர்ச்சிகரமான கொண்டாட்டம் இணையத்தில் பரவிய நிலையில், அதற்கான பின்னணி குறித்தும், நெருக்கடியான இந்த ஆட்டத்தை எப்படிக் கையாண்டார் என்பது குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 196 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்தியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் மிகச் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து அணியை அரையிறுதிக்கு முன்னேற்றினார்.

வெற்றி ரன்னை அடித்த மறுகணமே மைதானத்தில் மண்டியிட்ட சஞ்சு சாம்சன், வானத்தைப் பார்த்து தனது நன்றியைத் தெரிவித்தார். ஆட்ட நாயகன் விருது பெற்ற பின் பேசிய அவரிடம் இந்தக் கொண்டாட்டம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "இது எனக்கு மிகவும் சிறப்பான ஒரு தருணம். நான் இறைவனை ஆழமாக நம்புபவன். இந்தக் கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தத்தை எனக்குள் மட்டுமே ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த போது தனது அணுகுமுறையை எப்படி மாற்றிக்கொண்டார் என்பது குறித்து சாம்சன் விரிவாக விளக்கினார். "ஈடன் கார்டன் மைதானத்தில் 190 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். பனிப்பொழிவு இருந்ததால் பேட்டிங் செய்வது சற்று எளிதாகவே இருந்தது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது சற்று சவாலாக அமைந்தது.
பொதுவாக எனக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால், பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஒருசில ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்துவிட வேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால் விக்கெட்டுகள் சரிந்ததால், இந்த ஆட்டத்தை நானே எனது தோள்களில் சுமந்து இறுதிவரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது அனுபவம் அங்கு பெரிதும் உதவியது" என்று தெரிவித்தார்.
இலக்கைத் துரத்தும்போது தனது பேட்டிங் உத்தியை எப்படி மாற்றினார் என்பதையும் அவர் பகிர்ந்துகொண்டார். "முதலில் பேட்டிங் செய்யும்போது அணிக்கு ஒரு பெரிய ஸ்கோரை அமைக்க வேண்டும் என்பதால் அதிக சிக்ஸர்களை அடிக்க முயற்சிப்போம். ஆனால் இது போன்ற நெருக்கடியான போட்டியில் இலக்கைத் துரத்தும்போது நமது முடிவுகள் மாற வேண்டும். அதிக ரிஸ்க் எடுத்து சிக்ஸர் அடிப்பதை விட, பாதுகாப்பாக பவுண்டரிகளை விரட்டுவதே சிறந்த உத்தியாகும். பந்தைச் சரியாகக் கணித்து டைமிங் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். இன்று அந்த வியூகம் சிறப்பாக வேலை செய்தது" என்று சாம்சன் கூறினார்.

கடந்த சில மாதங்களாகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வந்த சாம்சன், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பது குறித்தும் பேசினார். "நான் எனது ஆட்டத்தின் அடிப்படை விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தேன். எனது செல்போனை அணைத்து வைத்தேன். சமூக வலைதளங்களில் இருந்தும் முழுமையாக விலகினேன். எனக்குள் இருந்த குரலை மட்டுமே நான் கவனித்தேன். தவறுகளைத் திருத்துகிறேன் என்று ஆட்டத்தை மாற்றாமல், எனது இயல்பான பேட்டிங்கிற்குத் திரும்பினேன். இன்று அது கைகொடுத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

இறுதியில், இந்த இன்னிங்ஸ் தமக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை மிகவும் உருக்கமாகப் பதிவு செய்தார். "இந்த வெற்றி ஒரு சதம் அடிப்பதைக் காட்டிலும் எனக்கு மிகவும் சிறப்பானது. கேரளாவில் இருந்து வந்த ஒரு சாதாரண இளைஞன், நாட்டிற்காக ஒரு மிக முக்கியமான போட்டியில் வெற்றி தேடித் தர வேண்டும் என்று கனவு காண்பது வழக்கம். அந்த கனவை நனவாக்க நான் துணிந்தேன். இன்று அது நிஜமாகியுள்ளது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது" என்று சஞ்சு சாம்சன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தனது நிதானமான மற்றும் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ள சஞ்சு சாம்சனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.