மும்பை: டி20 உலகக்கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியதற்கு சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத், சஞ்சு சாம்சனைப் பாராட்டினார். கொல்கத்தாவில் 196 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய சாம்சன் இந்திய அணியின் வெற்றிக்கு, 50 பந்துகளில் 97* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும் சாம்சன் பதற்றமடையாமல், ரன் சேஸை தொடக்கம் முதல் இறுதி வரை நின்று போட்டியை முடித்தார். கடந்த சீசனில் மோசமாக ஆடி, இந்த ஆண்டு தொடக்கம் சரியில்லாததால் அவர் டி20 சர்வதேச போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் தொடக்க ஜோடி தடுமாறியதால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் சாம்சன் மீண்டும் அணியில் இணைந்தார். இது குறித்து பேசிய பத்ரிநாத், "அவர் ரன்கள் எடுத்தபோது அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் சரியாக விளையாடவில்லை என்று கூறி நீக்கினர். ஆனால், ரிங்கு சிங் இல்லை என்றதும் அவருக்கு ஒரு வாய்ப்பு தானாகவே கிடைத்தது, ஒரு துவக்க வீரர் இடம் திறக்கப்பட்டது.

உலகக் கோப்பைக்கு முன் அவர் சிறந்த ஃபார்மில் இல்லை. ஆனாலும், சூழல் அவருக்குச் சாதகமாய் அமைந்தது. சரியான நேரத்தில் வாய்ப்பு கதவைத் தட்டியது. அதை அவர் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். வெற்றி பெற்றே ஆக வேண்டிய போட்டியில், ஒரு பெரிய இலக்கை துரத்தும் இவ்வளவு பெரிய தருணம்! அவர் அந்த அழுத்தத்தை உள்வாங்கிக்கொண்டு ஒரு அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார்," என்று பத்ரிநாத் கூறினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சாம்சன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இச்செயல் இந்திய அணியை அரையிறுதிக்கு முன்னேற்ற வழிவகுத்தது.மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சாம்சனின் முதிர்ச்சியான, ஆட்டத்தை வென்ற செயலை பத்ரிநாத் பாராட்டியுள்ளார். அவர் சரியான ஷாட் தேர்வோடு 12 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் அடித்து, ரன்ரேட் கட்டுப்பாட்டை மீறாமல் பார்த்துக்கொண்டார்.

"அவர் பல சதங்களையும், பெரிய ஸ்கோரையும் அடித்திருக்கலாம், ஆனால் இந்த இன்னிங்ஸ் அவருக்கு மிகச் சிறப்பானது. அவர் அபாரமான முதிர்ச்சியைக் காட்டினார், அனுபவமும் குணமும் ஒருபோதும் உங்களைக் கைவிடாது என்பதை நிரூபித்தார். ஒவ்வொரு பவுண்டரிக்கு பிறகும் ஒரு சிங்கிள் எடுத்தார். ஓவரின் முதல் மற்றும் கடைசி பந்துகளை மட்டுமே அவர் தாக்கினார். அவர் இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்," என்று பத்ரிநாத் மேலும் குறிப்பிட்டார். இந்திய அணி மார்ச் 5 ஆம் தேதி மும்பையில் இங்கிலாந்து அணியை அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.