கொல்கத்தா: டி20 உலக கோப்பை அரை இறுதி சுற்றுக்கு இந்திய அணி ஆறாவது முறையாக தகுதி பெற்று சாதனை படைத்திருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற வாழ்வா? சாவா? என்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் தனி ஆளாக போராடி 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்துகடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதன் மூலம் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். டி20 உலக கோப்பையில் சேஸிங்கில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையும் சஞ்சு சாம்சன் தற்போது படைத்திருக்கிறார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,உண்மையிலேயே இந்த இன்னிங்ஸ் மூலம் அணியை வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுதான் என்னுடைய ஒட்டுமொத்த உலகமும் என்று நினைக்கத் தோன்றுகிறது. நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்து நாட்டிற்காக ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான். இந்த ஒரு இன்னிங்ஸ் தான் நான் பல நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பல உச்சங்களையும், சரிவுகளையும் சந்தித்து இருக்கின்றேன். இதன் மூலம் என் திறமை மீது எனக்கே பலமுறை சந்தேகம் வந்திருக்கிறது. என்னால் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியுமா என்றெல்லாம் தோன்றுகிறது. ஆனால் இன்று கடவுள் எனக்கு ஆசீர்வாதம் தந்திருக்கின்றார்.
அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றேன். 12 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளிலும், 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கும் விளையாடுகின்றேன். ஆனால் நான் வெறும் 60 போட்டிகளில் தான் விளையாடு இருப்பேன்.
ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து 100 போட்டிகளுக்கு மேல் பார்த்திருக்கின்றேன். அதில் ரோகித் சர்மா, தோனி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் எப்படி விளையாடுவார்கள் என்பதை பார்த்து கற்றுக் கொண்டிருக்கின்றேன். கூடுதலாக என்னுடைய அனுபவத்தையும் சேர்த்து சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்பதை புரிந்து கொண்டு இன்று நான் ரன்கள் சேர்த்தேன்.
ஆனால் இவ்வளவு பெரிய இன்னிங்ஸ் ஆடுவேன் என்று நான் நினைக்கவில்லை. ஒரு தருணத்தில் ஒரு பந்து என்ற கவனம் செலுத்தி, பந்துக்கு ஏற்ற வகையில் விளையாடினேன். கடந்த போட்டியில் கூட நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம். அப்போது முதல் பந்தில் இருந்து அதிரடி காட்டினேன். ஆனால் இந்த போட்டி கொஞ்சம் வித்தியாசமானது.
நான் எப்போதெல்லாம் அதிரடி காட்ட முயற்சி செய்தனோ, அப்போதெல்லாம் விக்கெட்டுகள் விழுந்தது. எனவே இன்று கொஞ்சம் அமைதி காத்து பின் அதிரடி காட்ட வேண்டும் என்று நினைத்தேன். உண்மையிலேயே என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த நாள். எனினும் நான் நிகழ்காலத்திலே இருக்க விரும்புகின்றேன் என்று சஞ்சு சாம்சன் கூறினார்.