கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பத்தாண்டுகாலமாக நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்ற விமர்சனங்களுக்கு, தனது 97 ரன்கள் மூலம் சஞ்சு சாம்சன் தக்க பதிலடி கொடுத்து இந்திய அணியின் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது, சஞ்சு சாம்சன் அணியில் இருந்தாலும் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. நடப்பு 2026 தொடரிலும் இஷான் கிஷன், அபிஷேக் சர்மா போன்ற வீரர்களின் வருகையால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினமாகவே இருந்தது.
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். பின்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒவ்வொரு முறையும் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதனை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறுகிறார் என்ற விமர்சனம் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. உலகக் கோப்பை வரலாற்றில் இவ்வளவு பெரிய இலக்கை இந்திய அணி இதற்கு முன் வெற்றிகரமாகத் துரத்தியதில்லை என்பதால், இந்த இலக்கை எட்டுவது கடினம் என்றே கருதப்பட்டது.
சஞ்சு சாம்சனின் பொறுப்பான ஆட்டம்
196 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தலா 10 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 5 ஓவர்களுக்குள் 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், மறுமுனையில் சஞ்சு சாம்சன் எவ்வித பதற்றமும் இன்றி மிகத் தெளிவாக விளையாடினார்.
அகீல் ஹுசைன் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களை விளாசி தனது நோக்கத்தை அவர் தெளிவுபடுத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், சாம்சன் தனது நம்பிக்கையைக் கைவிடவில்லை. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் எப்படி இலக்கைத் துரத்துவார்களோ, அதே பாணியில் ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்வதில் அவர் கவனம் செலுத்தினார்.

இந்த சிறப்பான இன்னிங்ஸ் தற்செயலாக நடந்தது அல்ல. இது சஞ்சு சாம்சனின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாகும். கடந்த காலங்களில் ஷார்ட் பால்களை ஆடும் போது, அவரது கால்களின் அசைவுகளில் இருந்த சிறு குறைபாடு காரணமாக அவர் தடுமாறினார். ஆனால், வலைப்பயிற்சியில் கடுமையாக உழைத்து அந்தத் தவறுகளை அவர் முழுமையாகத் திருத்திக் கொண்டார். அதன்பின் தெளிவுடன் பந்தைச் சரியாகக் கணித்து விளையாடியதாலேயே இந்த ஆட்டத்தில் அவரால் சிறப்பான ஷாட்களை அடிக்க முடிந்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 97 ரன்களைக் குவித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். வெற்றி ரன்னை அடித்த மறுகணமே மைதானத்தில் மண்டியிட்டு, வானத்தைப் பார்த்துத் தனது நன்றியை அவர் வெளிப்படுத்தினார்.
பத்தாண்டு காலமாக இந்திய அணியில் தனக்கான ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்கப் போராடி வந்த சஞ்சு சாம்சனுக்கு, இந்த ஆட்டம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. சஞ்சு சாம்சனின் இந்த பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி கம்பீரமாக அரையிறுதிக்கு நுழைந்து, மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.