டிரிண்டாட் : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்ற நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் மூன்று போட்டிகள் மேற்கிந்திய தீவுகளிலும் இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்திலும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பல்வேறு வீரர்கள் பல சாதனைகளைப் படைக்க எதிர்நோக்கி இருக்கிறார்கள். அது என்னவென்று தற்போது பார்க்கலாம். இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா இன்னும் இரண்டு விக்கெட் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமை பெறுவார்.
அது மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனை ஹர்திக் பாண்டியாவுக்கு சேரும். இதேபோன்று டி20 கிரிக்கெட்டின் அசுரன் என்று அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் 325 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை பெறுவார். விராட் கோலி,ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு பிறகு இந்த மைல்களை எட்டும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை சூரிய குமாருக்கு கிடைக்கும்.
இதேபோன்று 24 வயதான வேக பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங் இந்த தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். இந்த மைல்களை எட்டிய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் இன்று சஞ்சு சாம்சன் 21 ரன்கள் எடுத்தால் 6 ஆயிரம் ரன்கள் எட்டிய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளரான சாகல் இந்தத் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.