அகமதாபாத்: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (அக்டோபர் 2 முதல் 6 ஆம் தேதி வரை) நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட்டின் புதிய தலைமுறை கேப்டனாக உருவெடுத்துள்ள சுப்மன் கில், இந்தத் தொடரில் இந்திய அணியை வழிநடத்துகிறார். இந்தப் போட்டியில், கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் என்று வர்ணிக்கப்படும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் சர் டான் பிராட்மேனின் பிரம்மாண்ட கேப்டன்சி சாதனை ஒன்றைச் சமன் செய்யும் அரிய வாய்ப்பு சுப்மன் கில்லுக்குக் கிடைத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு, அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையை டான் பிராட்மேன் தன்வசம் வைத்துள்ளார். அவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தபோது, வெறும் 11 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்து இந்த இமாலய சாதனையைப் படைத்தார். மறுபுறம், இந்திய அணியின் கேப்டனாக இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள சுப்மன் கில், 754 ரன்களைக் குவித்துள்ளார்.

தற்போது அகமதாபாத் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அவர் களமிறங்கும்போது, அது கேப்டனாக அவரது 11வது இன்னிங்ஸாக அமையும். இந்த ஒரே இன்னிங்ஸில் அவர் 246 ரன்களைக் குவித்தால், டான் பிராட்மேனின் 11-இன்னிங்ஸ் சாதனையைச் சமன் செய்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனையை அவருடன் பகிர்ந்துகொள்வார்.
இது சற்று கடினமான விஷயமாக இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதால் சுப்மன் கில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், அவரது ராசியான மைதானமான அகமதாபாத் மைதானத்தில் தான் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அந்த மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த உலக சாதனை மட்டுமல்லாமல், மேலும் பல இந்திய சாதனைகளையும் தகர்த்தெறியும் வாய்ப்பு கில்லுக்குக் காத்திருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெறும் வாய்ப்பு அதில் முதன்மையானது. தற்போது இந்தப் பட்டியலில் 38 போட்டிகளில் 2731 ரன்களுடன் ரிஷப் பண்ட் முதலிடத்தில் உள்ளார். காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடாத பண்ட்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்க, கில்லுக்கு இன்னும் 85 ரன்களே தேவை. இதுவரை 37 போட்டிகளில் விளையாடியுள்ள கில், 2647 ரன்களுடன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
அதேபோல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைக்கும் முனைப்பில் கில் உள்ளார். தற்போது தலா 9 சதங்களுடன் சுப்மன் கில் மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சமநிலையில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் ஒரு சதம் அடித்தால் கூட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 10 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை அவர் படைப்பார்.
இது மட்டுமல்லாமல், சிக்ஸர் அடிப்பதிலும் கில் ஒரு புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது. இதுவரை 43 சிக்ஸர்களை விளாசியுள்ள அவர், இன்னும் 7 சிக்ஸர்களைப் பறக்கவிட்டால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 50 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது இந்தியர் மற்றும் ஒட்டுமொத்தமாக நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.