மும்பை: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை டெல்லி பிரோசா கோட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்ட பிறகு தற்போது தான் செய்தியாளர்களை முதல் முறையாக அவர் சந்திக்கிறார்.
இதனால் ரோகித் சர்மா கேப்டன் பதவி நீக்கப்பட்டது, குறித்தும் புதிய கேப்டன் பணியை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்பது குறித்தும் பல கேள்விகளை எதிர்கொண்டார். அப்போது பேசிய சுப்மன் கில், "தொடரின் நடுவில் தான் இந்த அறிவிப்பு வெளியானது."

"ஆனால் எனக்கு கொஞ்சம் முன்பாகவே ஒரு நாள் அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்பட போகிறேன் என்று தெரியும் என்று கூறினார். இதன் மூலம் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவது குறித்து கில்லிடம் கம்பீர் பேசி இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது."
"இதை தொடர்ந்து பேசிய சுப்மன் கில், இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பொறுப்பு. இதை நான் கௌரவமாக கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டிலும் அணியை வழிநடத்த நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றேன். கடந்த சில மாதம் எனக்கு மிகவும் அற்புதமாக அமைந்திருக்கின்றது. எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன்."
"ஆனால் நான் நிகழ்காலத்தில் மட்டும் தான் இருக்கின்றேன். கடந்த காலத்தில் நான் என்ன சாதித்து இருக்கிறேன் என்பதை திரும்பிப் பார்க்கவும் நான் நினைக்கவில்லை. நாங்கள் ஒரு அணியாக இணைந்து தான் சாதித்து வருகின்றோம். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற நாங்கள் முயற்சி செய்வோம். ரோகித் பாயிடம் இருந்து நான் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றேன்."
"அவர் நெருக்கடியான கட்டத்தில் கூட அமைதியாக இருப்பார். வீரர்களுடன் அவர் நல்ல நட்புறவை வைத்துக் கொள்வார். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் எனக்கு அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ளும் விஷயமாக நினைக்கின்றேன். உடலளவில் நான் நல்ல முறையில் தான் இருக்கின்றேன். ஒரு சில நேரம் மனதளவில் கொஞ்சம் சோர்வாக இருக்கும். ஏனென்றால் தொடர்ந்து நாங்கள் விளையாடி வருவதால் ஏற்படும் விளைவு இது."
"அது மட்டுமில்லாமல் எங்கள் மீது அதிக அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஒரு சவாலாக தான் இருக்கும். இந்திய அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது சவால் தான். நாட்டுக்காக வெற்றியை பெற்று கோப்பையை வென்று தர வேண்டும். இதுதான் என்னுடைய கனவு இந்த சவால்களை அதற்காக நான் எதிர்கொள்வேன்" என்று கில் கூறினார்.