டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் அடிக்கும் 10வது சதமாக இது அமைந்துள்ளது. அதேபோல் கேப்டனான பின் சுப்மன் கில் அடிக்கும் 5வது சதம் இதுவாகும்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. டெல்லி மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியின் முதல் நாள் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 173 ரன்களுடமும், சுப்மன் கில் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 2வது நாள் தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் சுப்மன் கில் எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் சென்று கொண்டே இருக்க, 95 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். மறுபக்கம் நிதீஷ் குமார் ரெட்டி சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்தது.
தொடர்ந்து நிதீஷ் குமார் ரெட்டி 43 ரன்களில் ஆட்டமிழக்க, துருவ் ஜுரெல் களம் புகுந்தார். அரைசதம் அடித்த பின் சுப்மன் கில்லின் ஆட்டத்தில் வேகம் கூடியது. ஸ்பின்னர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் சுப்மன் கில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் 90 ரன்களை எட்ட, அவர் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆனால் கொஞ்சம் கூட பயமோ, பதற்றமோ இல்லாமல் சுப்மன் கில் தனது 10வது டெஸ்ட் சதத்தை எட்டினார். அதேபோல் கேப்டனான பின் 7 போட்டிகளில் ஆடியுள்ள சுப்மன் கில்லின் 5வது சதம் இதுவாகும். அதேபோல் விராட் கோலிக்கு பின் ஒரு ஆண்டில் 5 டெஸ்ட் சதங்களை விளாசிய இந்திய கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார்.
அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதன் மூலமாக ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். சுப்மன் கில்லின் ஆட்டத்தை பார்த்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கைகளை தட்டி பாராட்டினார்.