மும்பை: நடப்பு 2026 டி20 உலகக் கோப்பையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது பேட்டிங்கை விட கேப்டன் பொறுப்பிலேயே அதிக கவனம் செலுத்துவதாக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் சூர்யகுமார் மீண்டும் ஏமாற்றினார்.
196 ரன்கள் இலக்கை துரத்தியபோது, சூர்யா 16 பந்துகளில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும், இந்திய அணி கடைசி ஓவரில் ஒரு மறக்க முடியாத ரன் சேஸை வெற்றிகரமாக முடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

சூர்யகுமார் யாதவின் பேட்டிங் தடுமாற்றங்கள் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், “சூர்யா தனது கேப்டன்சி மீது அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அவர் தனது பேட்டிங்கை மறந்துவிடுகிறார். கொல்கத்தாவில் ஒரு கேப்டன் இன்னிங்ஸ் ஆடி வெல்ல இது நல்ல வாய்ப்பு. அங்கு வெற்றி இன்னிங்ஸ் ஆடுவது பெரிய விஷயம்,” என்றார்.

இதற்கிடையில், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு அளித்த ஆதரவைப் ஸ்ரீகாந்த் பாராட்டினார். டி20 உலகக் கோப்பையில் அணிக்குள் அடிக்கடி வந்து போயிருந்த சாம்சன், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 50 பந்துகளில் 97* ரன்கள் குவித்து, வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், “கம்பீர் மற்றும் அணி நிர்வாகத்திற்கு என் சலாம். அவர்கள் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தனர். நடுவில் ரிங்கு சிங் சோபித்திருந்தால், சஞ்சு சாம்சன் ஆடியிருக்க மாட்டார். இருவருமே சரியாக ஆடாததால், ஒருவர் ஆட வேண்டிய நிலை. ஆனால் இந்த இன்னிங்ஸ் மூலம் சஞ்சு தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இனிமேல், அவரை தொடக்க இடத்திலிருந்து மாற்ற முடியாது,” என்றார்.

கிட்டத்தட்ட 200 ரன்கள் இலக்கை துரத்தியபோது, சாம்சன் சதம் அடிக்க 3 ரன்கள் குறைவாகவே எடுத்தார். வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் 30 ரன்களைக்கூட தாண்டவில்லை. அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு மிக முக்கியம். “இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, இங்கிலாந்து நடுங்கும். மும்பை, பல இந்திய வீரர்களுக்குச் சொந்த மைதானம்,” என்று ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார்.அரையிறுதிக்கு முன்னேறும் வழியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் மட்டுமே தோற்றன. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்துடன் மோதும்.