மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் வெஸ்ட் இண்டீஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அஷ்வின், இந்திய அணி வெற்றி பெற்றாலும் பல குறைகள் தெளிவாக தெரிந்ததாக கூறினார்.“இந்தியா பீல்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி, டாஸ் முடிவிலும் கூட எதிர்பார்த்த தரத்தில் இல்லை. இனி வரும் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வதை சீரியஸாக யோசிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய ஸ்கோர் அடிக்கும் வாய்ப்பை இந்தியா வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அந்த அணியில் சுனில் நரைன் அல்லது சாமூவெல் பத்ரி போன்ற தரமான பந்துவீச்சாளர்கள் இருந்திருந்தால் போட்டி முடிவு மாறியிருக்கும் என்றும் கூறினார்.

இந்தியா அரையிறுதிக்கு வந்தாலும் பயணம் எளிதாக இல்லை என்று அஷ்வின் நேர்மையாக ஒப்புக்கொண்டார்.கடைசி இரண்டு ஆண்டுகளில் வெறும் இரண்டு டி20 தொடர்களை மட்டுமே வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியாவே அதிக அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணி இதுவரை 13 கேட்ச்களை தவறவிட்டுள்ளது, இது தொடரில் அதிகமானது என்பதும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.மார்ச் 5ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து மோத உள்ளது.இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் என்று அஷ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“பிட்ச் ஸ்பின்னர்களுக்கு உதவினால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள். இந்தியா ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வியை சந்தித்து விட்டது. இனி அவர்கள் மிகப்பெரிய பேவரிட்ஸ்,” என்றார். இதுவரை இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் 6வது முறையாக அரையிறுதியில் விளையாடுகிறது.2007 மற்றும் 2024 ஆண்டுகளில் இந்தியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.