கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று (மார்ச் 1) இரவு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்குச் செல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்தப் போட்டியில், வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. கடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய அதே உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்கினாலும், அணியின் பந்துவீச்சு கூட்டணியில் சில மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அபாரமாகச் செயல்பட்டு 256 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அபிஷேக் சர்மா அரைசதம் கடந்து ஃபார்முக்கு திரும்பியதும், திலக் வர்மா ஃபினிஷர் ரோலில் மிரட்டியதும் அணிக்குப் பெரிய பலமாக அமைந்தது.
ஆனால், பந்துவீச்சில் இந்திய அணிக்குச் சில நெருக்கடிகள் உள்ளன. குறிப்பாக, ஆறாவது பந்துவீச்சாளராகச் செயல்படும் ஆல்ரவுண்டர் சிவம் துபே கடந்த சில போட்டிகளாகவே அதிக ரன்களை வாரி வழங்கி வருகிறார். ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் வீசிய 2 ஓவர்களிலேயே 46 ரன்களை விட்டுக்கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் பவர் ஹிட்டர்கள் அதிகம் இருப்பதால், சிவம் துபேவுக்குப் பந்துவீச வாய்ப்பளிப்பது இந்திய அணிக்குப் பெரிய ஆபத்தாக மாறலாம்.
அதேபோல, தொடர்ச்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியும் கடந்த இரண்டு போட்டிகளில் தனது வழக்கமான ஃபார்மில் இல்லை. தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். அணிக்குத் திரும்பிய அக்சர் படேலும் பந்துவீச்சில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் பந்துவீச்சின் முழுப் பொறுப்பும் ஜஸ்பிரித் பும்ராவின் தோள்களிலேயே விழுகிறது. எதிரணிகள் பும்ராவின் ஓவர்களைப் பாதுகாப்பாக விளையாடிவிட்டு, மற்ற பந்துவீச்சாளர்களை குறிவைத்து ரன் குவிக்கும் யுக்தியைக் கையாளுவது இந்திய அணிக்குச் சவாலாக மாறியுள்ளது.
பந்துவீச்சை வலுப்படுத்தச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை ஆடும் லெவனில் சேர்க்க அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. நடப்புத் தொடரில் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். தற்போது சிவம் துபே அல்லது அக்சர் படேலுக்குப் பதிலாக குல்தீப் யாதவைக் களமிறக்கினால், அது இந்திய அணியின் பந்துவீச்சை வலுவாக்கும்.
ஆனால், அவ்வாறு செய்தால் அணியின் பேட்டிங் வரிசை பலவீனமடையும் என்ற அச்சமும் உள்ளது. தென்னாப்பிரிக்காவிடம் பேட்டிங்கில் அடைந்த சரிவை மீண்டும் சந்திக்கக் கூடாது என்பதால், கடந்த போட்டியில் வென்ற அதே அணியையே இந்திய நிர்வாகம் களமிறக்க அதிக வாய்ப்புள்ளது.

தந்தையின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு ரிங்கு சிங் இந்திய அணியுடன் இணைய உள்ளார். ஆனால், திலக் வர்மா ஃபினிஷர் ரோலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாலும், அணியின் பந்துவீச்சுத் தேர்வில் உள்ள நெருக்கடியாலும், ரிங்கு சிங் இன்றைய போட்டியிலும் பெஞ்சில் அமரவே அதிக வாய்ப்புள்ளது. அவரை அணியில் சேர்த்தால் ஒரு பந்துவீச்சாளரைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அவரை ரிசர்வ் வீரராகவே வைத்திருக்க அணி நிர்வாகம் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே / குல்தீப் யாதவ், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.