கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மிக முக்கியமான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதால், இரு அணிகளுக்கும் இது ஒரு வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

டாஸ் வென்ற பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளோம். ஆடுகளம் பார்க்க நன்றாக உள்ளது. இது இலக்கைத் துரத்துவதற்குச் சாதகமான மைதானமாகும். ஆட்டம் செல்லச் செல்ல ஆடுகளம் பேட்டிங்கிற்கு இன்னும் எளிதாக மாறும் என்பதால் சேஸிங் செய்வதே சிறந்த தேர்வாக இருக்கும். மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது, அவர்களுக்கு ஒரு சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்கக் காத்திருக்கிறோம். கடந்த ஆட்டத்தில் அனைத்து விஷயங்களையும் நாங்கள் சரியாகச் செய்தோம். அதனால் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்குகிறோம்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், "நாங்களும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீசவே விரும்பியிருப்போம். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்கள் அணியின் நோக்கமாகும். எங்கள் வீரர்களில் பெரும்பாலானோருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இருப்பதால், அது இன்று எங்களுக்குக் கைகொடுக்கும் என நம்புகிறோம். இது எங்களுக்கு ஒரு வாழ்வா சாவா ஆட்டம். சிறந்த அணிகளுக்கு எதிராக இப்படிப்பட்ட நெருக்கடியான போட்டிகளில் விளையாடவே நாங்கள் ஆசைப்படுகிறோம். எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அகீல் ஹுசைன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்" என்று கூறினார்.

கொல்கத்தா ஆடுகளம் கருப்பு மண்ணால் தயார் செய்யப்பட்டுள்ளதால், இது சற்று மெதுவாகச் செயல்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு பேட்டர்கள் பொறுமையுடன் விளையாட வேண்டும். மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும். பயிற்சி முகாமில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தீவிரமாகப் பந்துவீசி பயிற்சி பெற்றார்.
தந்தையை இழந்த துக்கத்திலும் இந்திய அணியுடன் நேற்றிரவு இணைந்த அதிரடி வீரர் ரிங்கு சிங் மைதானத்திற்கு வந்துள்ளார். இருப்பினும், கடந்த போட்டியில் வெற்றி பெற்ற கூட்டணியை மாற்ற வேண்டாம் என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதால் அவருக்கு இன்றைய போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்திய அணி எந்த மாற்றமும் இன்றி களமிறங்குகிறது.

இந்திய அணி: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
வெஸ்ட் இண்டீஸ் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், ரோவ்மன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், மேத்யூ ஃபோர்டு, அகீல் ஹொசைன், குடாகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப்.