கொல்கத்தா: டி20 உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது. வாழ்வா? சாவா? என்ற கடைசி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாய் ஹோப் 32 ரன்களும், ராஸ்டன் செஸ் 40 ரன்கள் எடுத்து முதல் விக்கெட் 68 ரன்கள் சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயர் 27 ரன்களில் ஆட்டமிழக்க,ருத்தர் ஃபோர்ட் 14 ரன்களில் வெளியேறினார். எனினும் இறுதியில் ரோமன் போவெல் 34 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 37 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

இந்திய பந்துவீச்சு தரப்பில் பும்ரா இரண்டு விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். இதனை அடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினார். அபிஷேக் ஷர்மா சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுவார் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்திலேயே ஸ்பின்னர்களை இறக்கியது.
எனினும் சஞ்சு சாம்சன் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி சுழற் பந்துவீச்சாளர்களை பவுண்டரி, சிக்சர் என அடித்தார். மறுபுறம் அபிஷேக் ஷர்மா 11 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 10 ரன்களில் ஆட்டம் இழ்ந்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய இசான் கிசன், ஆறு பந்துகளை எதிர்கொண்டு வெறும் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதனால் இந்திய அணி 41 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது சஞ்சு சாம்சன் களத்தில் இணைந்து, சூரியகுமார் யாதவ் உடன் பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மிட்க போராடினார். சூரியகுமார் அமைதியாக விளையாட, மறுபுறம் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டி 26 பந்துகளில் தன்னுடைய முதல் டி20 உலக கோப்பை அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

சூரியகுமார் யாதவ் 18 ரன்களில் வெளியேற திலக் வர்மா களத்திற்கு வந்து அதிரடி காட்டினார். குறிப்பாக சமர் ஜோசப் வீசிய ஆட்டத்தின் 13வது ஒரு ஓவரில் இந்தியா 17 ரன்களும், அடுத்த ஓவரில் 15 ரன்களும் சேர்க்க ஆட்டம் இந்தியாவில் பக்கம் வந்தது. முக்கிய கட்டத்தில் திலக் வர்மா 15 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 17 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் தேவைப்பட, சஞ்சு சாம்சன் முதல் பந்தில் சிக்சரும், 2வது பந்தில் பவுண்டரியும் அடித்து, 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா 6வது முறையாக தகுதி பெற்றிருக்கிறது. தொடரை விட்டு வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது.