அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஏமாற்றம் அளித்தார். முதல் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமாக பேட்டிங் செய்து 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு, இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 54 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின் மூன்றாவது வரிசையில் களமிறங்கினார் சாய் சுதர்சன். கே.எல். ராகுலுடன் இணைந்து அவர் பேட்டிங் செய்தார்.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சனுக்கு மூன்று போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அவர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்ற விமர்சனம் இருந்தது. இந்த நிலையில், இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், ஏமாற்றம் அளிக்கும் வகையில் 19 பந்துகளைச் சந்தித்து 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் சாய் சுதர்சன். அவர் தனது ஆட்டத்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் வீசியப் பந்தில் எல்.பி.டபிள்யு (LBW) முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து, ரசிகர்கள் அவரைச் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இவருக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டுவிட்டதாக சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், சர்பராஸ் கான் போன்ற வீரர்கள் காத்திருப்பில் உள்ளனர். எனவே, சாய் சுதர்சன் அடுத்த இன்னிங்ஸிலும் ரன் குவிக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
எனினும், இந்திய அணி நிர்வாகம் சாய் சுதர்சனுக்கு நீண்ட கால அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்திருக்கிறது. எனவே, அவர் இந்தத் தொடரில் அடுத்த போட்டியிலும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் பேட்டிங் செய்வாரா என்று எதிர்பார்ப்பும் உள்ளது.