டோமினிக்கா : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று டோமினிக்காவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள டிராவிட்டும் ரோஹித் சர்மாவும் முடிவெடுத்துள்ளார்கள்.
இந்திய அணி இந்த தொடர் முதல் பல்வேறு மாற்றங்களை சந்திக்க இருக்கிறது. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் மூன்று வீரர்கள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜெய்ஸ்வால். இனி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக ஜெயஸ்வால் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதே ஆன ஜெய்ஸ்வால் உள்ளூர் கிரிக்கெட் முதல் ஐபிஎல் தொடர் வரை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். இதன் காரணமாக ஜெய்ஸ்வாலுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இடது வலது கை பேட்ஸ்மேன்கள் தொடக்க ஜோடியாக களமிறங்க வாய்ப்பு இருக்கும்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இஷான் கிஷன். டி20, ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி அசத்தியுள்ள இஷான் கிஷன் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது. கே எஸ் பரத் தமக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித்ததால் இஷான் கிஷனை அந்த இடத்தில் களம் இறக்க ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார்.மேலும் ரிஷப் பண்ட் போல் இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார். தொடர்ந்து ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் முகேஷ் குமார், 140 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து வீசக்கூடியவர். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சு மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் எடுபடும் என்பதால் முகேஷ் குமாருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரே நாளில் மூன்று இந்திய வீரர்கள் அறிமுகமாக உள்ளனர்.