IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் சோலியை முடித்த துருவ் ஜுரல்.. ரிஷப் பண்ட்டை மறக்க வைத்த ஆட்டம்
அகமதாபாத்: இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு, சதமடித்து அழுத்தமாகப் பதிலளித்துள்ளார் இளம் வீரர் துருவ் ஜுரல். காயமடைந்த ரிஷப் பண்ட்டிற்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த துருவ் ஜுரல், அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியின் மூலம், இந்திய விக்கெட் கீப்பர்களின் ஒரு சிறப்புப் பட்டியலில், ஜாம்பவான்களான எம்.எஸ். தோனி மற்றும் ஃபரோக் இன்ஜினியருடன் தனது பெயரை இணைத்துள்ளார் துருவ் ஜுரல். உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகச் சதம் அடித்த மூன்றாவது இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, 1967-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் முன்னாள் விக்கெட் கீப்பர் ஃபரோக் இன்ஜினியர் 109 ரன்களும், 2011-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்டில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 144 ரன்களும் அடித்திருந்தனர். பல ஆண்டுகளாக நீடித்துவரும் இந்தச் சாதனையை, ஜுரல் நிகழ்த்தி இருக்கிறார்.
முதிர்ச்சியான ஆட்டத்தால் இமாலய ஸ்கோர்
போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்திய அணி 218 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறிய நிலையில், ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் துருவ் ஜுரல். ஆரம்பம் முதலே மிகவும் நிதானமாகவும், முதிர்ச்சியுடனும் பேட்டிங் செய்த அவர், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதித்தார். 190 பந்துகளைச் சந்தித்து தனது முதல் சதத்தை எட்டிய அவர், இந்திய அணியை ஒரு இமாலய ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார்.
இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்து, 237 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. துருவ் ஜுரல் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தச் சதம் மற்றொரு சாதனைக்கும் வித்திட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்திய விக்கெட் கீப்பர்களால் அடிக்கப்படும் மூன்றாவது சதம் இதுவாகும் (ரிஷப் பண்ட் - 2, துருவ் ஜுரல் - 1).
ஒரு ஆண்டில் இந்திய விக்கெட் கீப்பர்கள் மூன்று சதங்கள் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இதன்மூலம், ரிஷப் பண்ட்டின் இடத்தை நிரப்புவதற்குத் தகுதியான வீரர் நான் தான் என்பதை துருவ் ஜுரல் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இந்த அபாரமான ஆட்டம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications