அகமதாபாத்: இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் துருவ் ஜுரல். அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார். அதன் பிறகு, அவர் செய்த ஒரு செயல், அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மேலும், அவரது சதத்தால் இந்திய அணி பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் காயம் காரணமாகக் கிடைத்த வாய்ப்பை இறுகப் பற்றிக்கொண்ட துருவ் ஜுரல், இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் அபாரமாக ஆடி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். 190 பந்துகளில் பவுண்டரி அடித்து சதத்தை எட்டியதும், ஹெல்மெட்டைக் கழற்றி, பேட்டை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், அடுத்த கணமே நேராக நிமிர்ந்து நின்று, பேட்டை துப்பாக்கி போல நிற்க வைத்து, இந்திய ராணுவத்தின் பாணியில் ஒரு கம்பீரமான 'சல்யூட்' அடித்து தனது மரியாதையைச் செலுத்தினார்.

இதைப் பார்த்த இந்திய அணியின் உடை மாற்றும் அறையே எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தது. மறுமுனையில் இருந்த ரவீந்திர ஜடேஜாவும் புன்னகையுடன் கைதட்டி அவரைப் பாராட்டினார். துருவ் ஜுரலின் இந்தச் சல்யூட்டிற்குப் பின்னால், ஒரு தியாகத்தின் கதை இருக்கிறது.
அவரது தந்தை நேம் சந்த், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். குறிப்பாக, 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் நாட்டிற்காகப் போராடிய ஒரு வீரர். தனது தந்தை நாட்டிற்குச் செய்த சேவைக்கும், அவரது தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் விதமாகவே, தான் அடிக்கும் ஒவ்வொரு அரைசதம் மற்றும் சதத்தின்போதும் இந்தச் சல்யூட் அடித்து மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் துருவ் ஜுரல்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய மேடையில், தனது தந்தையைக் கௌரவித்த அவரது இந்தச் செயல், அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த பின் பேசிய ஜுரல், தான் தனது தந்தைக்கு மட்டும் சல்யூட் செய்யவில்லை என்றும், கார்கில் போரில் பங்கேற்ற இராணுவ வீரர்களுக்கும் சேர்த்து சல்யூட் செய்ததாக கூறினார்.
இந்த உணர்வுப்பூர்வமான தருணத்தைத் தாண்டி, கிரிக்கெட் ரீதியாகவும் துருவ் ஜுரலின் இந்த இன்னிங்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்திய அணி, சுப்மன் கில் (50) மற்றும் கே.எல். ராகுல் (100) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்த பிறகு, ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த அவர், 206 ரன்கள் என்ற பிரம்மாண்டமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.
210 பந்துகளைச் சந்தித்து, 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் குவித்த துருவ் ஜுரலின் இந்த ஆட்டம், இந்திய அணியை ஒரு இமாலய ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றது. இந்தச் சதத்தின் மூலம், பல சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகச் சதம் அடித்த 12வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்ற அவர், ஜாம்பவான்களான ஃபரோக் இன்ஜினியர், விஜய் மஞ்ச்ரேக்கர், அஜய் ரத்ரா, விருத்திமான் சாஹா ஆகியோருடன் தனது முதல் சதத்தை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அடித்த வீரர்கள் பட்டியலிலும் இணைந்துள்ளார்.