மும்பை: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து மனமுடைந்த நிலையில் பேசி இருக்கிறார் கருண் நாயர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனை செய்த பிறகும் 8 ஆண்டு காலம் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது இந்திய அணிக்குத் திரும்பிய கருண் நாயரின் கம்பேக் கதை, ஒரே ஒரு தொடருடன் சோகமாக முடிவுக்கு வந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பெறாதது, அவரைக் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்குத் திரும்பிய கருண் நாயர் அதில் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், அணியின் மிடில் ஆர்டருக்கு அனுபவம் சேர்க்கும் முக்கிய வீரராக அவர் பார்க்கப்பட்டார். ஆனால், அந்தத் தொடரில் அவர் எதிர்பார்த்த அளவிற்குச் சோபிக்கவில்லை. 5 போட்டிகளில் ஆடிய அவர், 8 இன்னிங்ஸ்களில் 25.62 என்ற சராசரியுடன், ஒரே ஒரு அரைசதத்துடன் 226 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தன்னை நீக்கியது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த கருண் நாயர், தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். "நான் நிச்சயம் அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். இப்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகளே வரவில்லை. இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது" என்று அவர் உடைந்து போய் கூறியுள்ளார். இங்கிலாந்து தொடரில் தனது செயல்பாடு குறித்துப் பேசிய அவர், கடைசிப் போட்டியில் அடித்த அரைசதத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதுவதாக குறிப்பிட்டார்.
"இதை நீங்கள் தேர்வுக் குழுவினரிடம்தான் கேட்க வேண்டும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. எனக்குத் தெரிந்தவரையில், கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வேறு யாரும் ரன் அடிக்காத நிலையில், நான் 50 ரன்கள் அடித்தேன். கடினமான சூழலில் அடிக்கப்பட்ட அந்த அரைசதம், ஒரு சதத்திற்கு இணையானது என்று நான் நம்புகிறேன். இந்தியா வெற்றி பெற்ற அந்தக் கடைசிப் போட்டியில், அணிக்கு நான் பங்களித்ததாகவே நினைத்தேன்" என்று கருண் நாயர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டுப் போட்டிகளில் கர்நாடக அணிக்காக ரன் மழை பொழிந்து, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த 33 வயதான கருண் நாயரின் சர்வதேச கிரிக்கெட் கனவு, ஒரே ஒரு தொடருடன் முடிவுக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.