டெல்லி: இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 3 இடத்திற்குத் தான்தான் சரியான தேர்வு என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறார் தமிழக வீரர் சாய் சுதர்சன். டெல்லியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஒரே ஒரு தவறான ஷாட் கூட ஆடாமல், மிக நேர்த்தியான அரைசதம் அடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியின் 45-வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் காரி பியர் வீச, சற்றே ஓவர்பிட்ச்சாக வந்த பந்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் சாய் சுதர்சன். தனது முழு பலத்தையும் பயன்படுத்தி மிட்-ஆஃப் திசைக்கு வெளியே பந்தை விரட்டி பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த அற்புதமான பவுண்டரியுடன், தனது இரண்டாவது டெஸ்ட் அரைசதத்தை 89 பந்துகளில் எட்டினார்.

சாய் சுதர்சனின் இந்த அரைசதம் வெறும் ரன்களாக மட்டும் பார்க்கப்படவில்லை. அது ஒரு வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்துள்ளது. இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில், ஒரு பேட்ஸ்மேன் தனது அரைசதத்தை ஒரே ஒரு தவறான ஷாட் (False Shot) கூட ஆடாமல் எட்டுவது இது இரண்டாவது முறை ஆகும்.
இதற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராஸ்டன் சேஸ் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். அதாவது, விக்கெட் விழ வாய்ப்புள்ள எந்த ஒரு தவறான ஷாட்டையும் (எட்ஜ், மிஸ்-ஹிட் போன்றவை) ஆடாமல், முழு கட்டுப்பாட்டில் பேட்டிங் செய்து இந்த மைல்கல்லை சாய் சுதர்சன் எட்டியுள்ளார் என்பது அவரது அபாரமான பேட்டிங் திறமைக்குச் சான்றாகும்.
ஒரு அணியின் வெற்றிக்கு, நம்பர் 3 வீரரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அந்த வகையில், இந்த நெருக்கடியான நேரத்தில் சாய் சுதர்சன் ஆடியுள்ள இந்த நிதானமான இன்னிங்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகக் கடினமான இடங்களில் ஒன்றான நம்பர் 3 இடத்திற்கு அவரை ஒரு முக்கிய போட்டியாளராக நிலைநிறுத்தியுள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த சாய் சுதர்சன், இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். இந்த அரைசதத்தை ஒரு பெரிய சதமாக மாற்றி, இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.