டெல்லி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள சுப்மன் கில், சுனில் கவாஸ்கரின் சாதனைகளை ஒவ்வொன்றாக வேட்டையாடி வருகிறார். அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கவாஸ்கரின் மற்றுமொரு பிரம்மாண்டமான சாதனையை முறியடித்து, புதிய சரித்திரம் படைக்கும் வாய்ப்பு சுப்மன் கில்லுக்கு கிடைத்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக, அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனை, ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் பெயரில் உள்ளது. அவர், கேப்டனாகத் தனது 15-வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார். ஆனால், தற்போது இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தி வரும் சுப்மன் கில், இந்தச் சாதனையை ராக்கெட் வேகத்தில் நெருங்கி வருகிறார்.

இதுவரை, கேப்டனாக வெறும் 11 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில், 804 ரன்களைக் குவித்துள்ளார். இன்னும் 196 ரன்களை அவர் தனது அடுத்த 3 இன்னிங்ஸ்களுக்குள் (மொத்தம் 14 இன்னிங்ஸ்களுக்குள்) எடுத்துவிட்டால், சுனில் கவாஸ்கரின் 45 ஆண்டுகால சாதனையை முறியடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்தியக் கேப்டன் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.
சுப்மன் கில், கவாஸ்கரின் சாதனைகளை வேட்டையாடுவது இது முதல் முறையல்ல. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியக் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை சுப்மன் கில் தகர்த்தெறிந்தார். முன்பு கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே தொடரில் 732 ரன்கள் குவித்து இருந்தார். அதை முறியடித்த சுப்மன் கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரே தொடரில் 754 ரன்கள் குவித்தார்.
கேப்டன் என்ற கூடுதல் பொறுப்பு, பல வீரர்களின் பேட்டிங்கை பாதிக்கும். ஆனால், சுப்மன் கில் விஷயத்தில் அது தலைகீழாக அமைந்துள்ளது. கேப்டன் பதவி, அவரது பேட்டிங்கை மேலும் மெருகேற்றி, அவரை ஒரு ரன் மெஷினாக மாற்றியுள்ளது. இங்கிலாந்து தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்றது முதல் அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் 196 ரன்கள் குவித்து கவாஸ்கர் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்பு உள்ளது.