அகமதாபாத்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் டாஸில் தோல்வி அடைந்தாலும், வெற்றி பெறும் போது எந்த கவலையும் இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸில் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 448 ரன்களை குவித்தது.

இதன்பின் இந்திய அணி 3வது நாள் தொடக்கத்தில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி தரப்பில் துருவ் ஜுரெல் 125 ரன்களையும், ஜடேஜா 104 ரன்களையும், கேஎல் ராகுல் 100 ரன்களையும் விளாசினர். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இரண்டரை நாளிலேயே இந்திய அணி வென்றிருக்கிறது.
சுப்மன் கில் கேப்டனானதில் இருந்து ஆடிய 6 போட்டிகளிலும் டாஸை இழந்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறார். இந்த வெற்றிக்குப் பின் சுப்மன் கில் பேசுகையில், தொடர்ச்சியாக 6 டாஸ்களில் தோல்வி அடைந்திருக்கிறோம். ஆனால் வெற்றிகளை பெறும் போது, டாஸில் தோற்பது பற்றி எந்த கவலையும் இல்லை. இந்த ஆட்டம் எங்களுக்கு சிறந்த ஒன்றாக அமைந்தது.
ஏனென்றால் பேட்டிங்கில் 3 பேர் சதம் அடித்துள்ளார்கள்.. ஃபீல்டிங் அற்புதமாக இருந்தது. அதனால் எனக்கு எந்தப் புகாரும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நல்ல தொடக்கம் கிடைத்தால், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும். நானும், ஜெய்ஸ்வாலும் நல்ல தொடக்கம் கிடைத்தும் வீணடித்துவிட்டோம். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக மாற்றினர்.
அதேபோல் தரமான ஸ்பின்னர்கள் இருக்கும் போது, அவர்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் பவுலிங் கொடுக்க வேண்டும். அது கொஞ்சம் சவாலாக உள்ளது. ஆனால் அந்த சவாலை அனுபவித்து வருகிறேன். ஒரு கேப்டனாக ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன். இதைக் கற்றுக் கொண்டேன் என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
கடந்த 2 ஆண்டுகளாகவே ஒரு அணியாக ஆடி வருகிறோம். கடினமான சூழல்களில் இருந்து சிறப்பாக ஆடி வெளி வந்துள்ளோம். இந்திய அணியில் உள்ள அனைவரும் கற்றுக் கொண்டே இருக்கிறோம். எங்களின் அனுபவத்தில் இருந்து புதிய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.