டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரும் வெள்ளிக்கிழமை டெல்லியில் பலப் பரீட்சை நடத்துகிறது. 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் இந்தியாவே மிருக பலத்தில் உள்ள நிலையில் பேட்டிங் வரிசையில் ஒரு சில சிக்கல்கள் நிலவுகிறது.
இந்திய டெஸ்ட் அணியில் புஜாராவுக்கு பிறகு அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் கிடைக்கவில்லை. இந்த இடத்திற்கு பல வீரர்கள் வந்து சென்ற நிலையில், தமிழக வீரர் சாய் சுதர்சன் தனது திறமையை வெளிப்படுத்தி புஜாரா இடத்தை நிரப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் சாய் சுதர்சன் 7 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 21 சராசரி என்று தான் வைத்திருக்கிறார். இதனால் அவர் மீது நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் சாய் சுதர்சன் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறார்.
ஏற்கனவே கருண் நாயர் உள்ளிட்டோர் மூன்றாவது வீரராக சோபிக்காத நிலையில் தற்போது சாய் சுதர்சனுக்கும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் மொத்தமாகவே 147 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். வெஸ்ட் இண்டீஸ் எதிராக முதல் டெஸ்டில் ஏழு ரன்கள் எடுத்துள்ள சாய் சுதர்சன் இரண்டாவது டெஸ்டில் சதம் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஏற்கனவே அணியில் இருக்கும் துருவ் ஜூரல் சதம் அடித்து உள்ளார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் டெஸ்ட் அணிக்கு திரும்பினால் துருவ் ஜூரலுக்கு மூன்றாவது வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும் என்று செய்திகளும் வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே வாய்ப்புக்காக அணியில் தேவுதட் படிக்கல் இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் சர்பராஸ்கான், ரஜத் பட்டிதார், ருதுராஜ் போன்ற மிகப்பெரிய வீரர்கள் பட்டியலில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை சாய் சுதர்சன் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் அவருக்கு பதில் வேறு வீரர்கள் தென்னாப்பிரிக்க தொடரில் இடம் பெறுவார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.