மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதியும் நடக்க உள்ளது. சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் முதல்முறையாக விளையாட உள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணி ஆடிய போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பின்னரே இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்தது. ஜாம்பவான் வீரர்களான அஸ்வின், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட பலரும் ஓய்வை அறிவித்து வெளியேறினர்.
அதேபோல் பயிற்சியாளராக கவுதம் கம்பீரும் சொந்த மண்ணில் இதுவரை பெரியளவில் சாதிக்கவில்லை. இந்த நிலையில் இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சொந்த மண்ணில் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி விளையாடி வருகிறது. அந்த அணிக்கு கூட ஸ்ரேயாஸ் ஐயர் தான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஆசியக் கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் சேர்க்கப்படாததே பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது.
அதேபோல் சர்ஃபராஸ் கான் புச்சி பாபு தொடரில் அபாரமாக ஆடியதோடு, துலீப் டிராபியில் சிறந்த ஃபார்மில் இருந்தார். ரிஷப் பண்ட் காயம் காரணமாக விளையாட முடியாத சூழலில், அதிரடியாக விளையாடக் கூடிய ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு தேவையாக உள்ளார். அந்த இடத்தை சர்ஃபராஸ் கானை வைத்து நிரப்ப அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரரான முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். ஏனென்றால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் முகமது ஷமி துலீப் டிராபியில் கூட சொதப்பினார். இதனால் முகமது ஷமிக்கு மீண்டும் இந்திய அணியின் கதவுகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.