டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7வது டெஸ்ட் சதத்தை விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலமாக 24 வயதிற்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களை விளாசிய 8வது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. டெல்லியில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிறப்பாக ஆடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர்.

நிதானமாக ஆடிய கேஎல் ராகுல் 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஜெய்ஸ்வால் - சாய் சுதர்சன் கூட்டணி இணைந்தது. இதன்பின் ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ஜெய்ஸ்வால் எடுத்துக் கொண்டார். பவுண்டரியாக விளாசிய ஜெய்ஸ்வால், 82 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களையும் விளாசி புதிய சாதனை படைத்தார்.
இதன்பின் உணவு இடைவேளையின் போது சாய் சுதர்சனை காப்பாற்றும் வகையில் டாட் பால்களை ஆடிய ஜெய்ஸ்வால், பின்னர் அதிரடியில் விளாசி தள்ளினார். டி20 கிரிக்கெட்டை போல் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி பறந்து கொண்டே இருந்தது. குறிப்பாக ஆண்டர்சன் பிலிப் பவுலிங்கில் ஜெய்ஸ்வால் அடித்த பவுண்டரிகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்தது.
ஒரு கட்டத்தில் 90 ரன்களை ஜெய்ஸ்வால் கடந்த போது, சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதன்பின் கொஞ்சம் நிதானமாக ரன்களை சேர்க்க, ரசிகர்களுக்கு ஒவ்வொரு பந்துக்கும் பதற்றம் அதிகரித்தது. அந்த நேரத்தில் சாய் சுதர்சன் விரைவாக ரன்கள் சேர்க்க, ஜெய்ஸ்வாலுக்கும் பதற்றம் குறைந்தது. இறுதியாக 145 பந்துகளில் ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் அடிக்கும் 7வது டெஸ்ட் சதம் இதுவாகும். இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் கிரேம் ஸ்மித், வில்லியம்சன், அலைஸ்ட குக், ஜாவித் மியான்தத் ஆகியோரின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 24 வயதிற்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதமடித்த வீரர்கள் பட்டியலில் கிரேம் ஸ்மித்திற்கு பின், ஜெய்ஸ்வால் இடம்பிடித்துள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.