டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறிவிட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 175 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென ஃபீல்டரின் கைகளில் பந்தை அடித்துவிட்டு ரன்கள் ஓட முயற்சித்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ரன்களை சேர்த்திருந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 173 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் 2வது நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தை ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடங்கியது. ஆட்டம் தொடங்கி 2 ரன்கள் மட்டும் எடுத்திருந்த ஜெய்ஸ்வால், ஜெய்டன் சீல்ஸ் வீசிய 2வது ஓவரிலேயே அவசரம் காட்டினார். மிட் ஆஃப் திசையில் பந்தை அடித்த ஜெய்ஸ்வால், நேராக சந்தர்பால் கைகளில் பந்து சென்றதை கவனிக்கவில்லை.
இதனை கவனித்த சுப்மன் கில், உடனடியாக ரன் ஓடி வர வேண்டாம் என்று திரும்பினார். ஆனால் கண்களை மூடிக் கொண்டு வந்த ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஓடி வராததை அறிந்து பின் க்ரீஸிற்கு திரும்ப முயன்றார். ஆனால் சந்தர்பால் நேரடியாக விக்கெட் கீப்பருக்கு த்ரோ எறிந்தார். இதனால் ஜெய்ஸ்வால் ரன் அவுட் செய்யப்பட, வேறு வழியின்றி 175 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரன் அவுட்டான பின் உடனடியாக சுப்மன் கில் பக்கம் திரும்பி, கோபத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து 175 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறிய ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். ஆனால் பவுண்டரி லைனில் இருந்த ஓய்வறையில் அமர்ந்து ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தை அடிக்க முடியாமல் தவறவிட்டதை நினைத்து சோகத்துடன் அமர்ந்திருந்தார்.