மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது .இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. எனினும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாகும்.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் மூலம் சுப்மன் கில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் கேப்டனாக டாசை வென்றுள்ளார். இதில் எடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ராகுல் 54 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 58 ரன்கள் சேர்த்தது. மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் தன்னுடைய ஏழாவது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் 23 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 3000 ரன்களை எட்டினார்.
23 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையும் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 150 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தாம் அடித்த ஏழு சதத்தில் ஐந்து சதம் 150 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.மறுமுனையில் சாய் சுதர்சன் சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 87 ரன்களில் அவர் ஆட்டம் இழந்தார்.
இறுதியில் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 68 பந்துகளை எதிர் கொண்டு 20 ரன்கள் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 173 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் இந்திய அணி 90 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தரப்பில் வாரிக்கன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.இந்திய அணி முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.