டெல்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இன்று அபாரமாக விளையாடினார். எப்போதும் அதிரடி காட்டக் கூடிய ஜெய்ஸ்வால் இன்று வழக்கத்திற்கு மாறாக முதலில் பொறுமையும் பின் கொஞ்சம் அதிரடியையும் கலந்து காட்டினார்.
குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தனர். இது இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறியது. தற்போது வரை ஜெயஸ்வால் 253 பந்துகளை எதிர் கொண்டு 173 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 22 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் மிகவும் ஒழுக்கத்துடன் ஆடியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ஜெயஸ்வாலின் ஆட்டத்தை பார்த்த பிறகு எனக்குள் தோன்றியது ஒன்றே ஒன்றுதான். தற்போது இருக்கும் எந்த ஐபிஎல் அல்லது டி20 சூப்பர் ஸ்டார் இதுபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற பசியுடன் விளையாடுவார்?
அதுவும் 150 ரன்கள் மேல் களத்தில் நிற்பார். ஜெய்ஸ்வால் இன்று அபாரமாக களத்தில் கவனத்துடன் ஒழுக்கத்துடன் இருந்தார். டிசிப்ளின் இல்லை என்றால் உங்களால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் சேர்க்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் ஒரு முனிவர் போல் ஜெயஸ்வால் இன்று களத்தில் இருந்தார். ஜெய்ஸ்வால் ஒரு நவீன கால கிரிக்கெட் வீரர்.
அவர் இன்று சதம் அடித்து விட்டு கொண்டாடிய விதத்தைப் பார்த்தாலே நம் அனைவருக்கும் அது புரிந்து இருக்கும். அது மட்டும் இல்லாமல் டி20 போட்டிகளிலும் அவர் சதம் அடித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து முறைக்கு மேல் 150 ரன்கள் அடித்திருக்கிறார். தற்போது இருக்கும் கிரிக்கெட் உலகில் தனித்துவமான வீரராக ஜெய்ஸ்வால் விளங்குகிறார்.
ஜெயஸ்வாலால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 ரன்களும் அடிக்க முடியும். அதே சமயம் டி20 கிரிக்கெட்டில் 200 ஸ்டைரக் ரேட்டிலும் விளையாட முடியும். அப்படி ஒரு அரிதான திறன் உடைய வீரரை பார்ப்பது மிகவும் கடினம். இந்த இளம் வீரரை நாம் பெரிய அளவு கொண்டாட வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஜெய்ஸ்வால் நாளைய போட்டியில் இரட்டை சதம் அடித்தால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதமாகும். ஏற்கனவே ஏற்கனவே 23 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.