இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்து இருக்கிறார். தன்னுடைய ஏழாவது சதத்தை 145 பந்துகளில் எட்டிய அவர் மொத்தமாக 22 பவுண்டரிகளை அடித்திருக்கிறார். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ஸ்வாலின் இன்றைய இன்னிங்சை பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வேண்டிய நேர்த்தியான ஆட்டத்தை இன்று ஜெய்ஸ்வால் விளையாடியதாக கூறினார்.

இது குறித்து பேசிய அவர், இன்று ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை பார்க்கும்போது பல வித்தியாசங்கள் எனக்கு தெரிந்தது. பொதுவாக பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்தால் உடனடியாக அவர் பந்தை டிரைவ் செய்து பௌண்டரிக்கு அடிப்பார். ஆனால் இன்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்து சென்றால் அதை அடிக்காமல் விட்டுவிட்டார்.
முதல் சில ஓவர்களில் அவர் எந்தவித பெரிய ஷாட்களையும் ஆடவில்லை. பந்து ஃபுல் லெங்த்தில் வந்தால் மட்டும் தான் அவர் அடித்தார். இன்று நான் எப்படி விளையாட போகிறேன் என்று ஒரு திட்டத்துடன் ஜெய்ஸ்வால் சென்று இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்பதை முன்பே அவர் தீர்மானித்து, அதனை களத்தில் செயல்படுத்தி இருக்கிறார்.
பொதுவாக இன்று நான் முதல் பந்தில் இருந்தே பெரிய ஷாட் ஆடி ரன்கள் சேர்ப்பேன் என்று எண்ணத்தில் இல்லாமல் ரன் குவிக்கும் வேகத்தை அடிக்கடி மாற்றி இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ஆட்டோமேட்டிக் காரை வீட்டிலே வைத்துவிட்டு மேனுவல் காரில் என்று வந்திருக்கிறார். அதனால் தான் காரின் வேகத்தை மாற்றுவது போல் ரன்குவிக்கும் வேகத்தை கியர் போட்டு மாற்றி இருக்கிறார் என்று பார்த்தீவ் பட்டேல் பாராட்டியுள்ளார்.