IND vs ZIM: பிளாஸ்டு! பிளாஸ்டு! இந்திய அணி வேற லெவல் பவுலிங்.. 125 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக இன்று அறிமுகமாகியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், வெஸ்லி மாதேவேரே மற்றும் டடிவானாஷே மருமானி ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் அந்த அணி ஓரளவுக்கு ரன் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக வெஸ்லி மாதேவேரே 34 ரன்களும், டடிவானாஷே மருமானி ஆட்டமிழக்காமல் 27 ரன்களும் எடுத்தனர். இவர்களின் முக்கியமான 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் ரன் அவுட் முறையில் முடிவுக்கு வந்தது. சிவம் துபேயின் சிறப்பான த்ரோவில் விக்கெட் கீப்பர் இஷன் கிஷன் மாதேவேரேவை ரன் அவுட் செய்தார். அடுத்த பந்திலேயே பிராட் எவன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தரப்பில் பிரின்ஸ் யாதவ் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிரின்ஸ் யாதவ் தனது 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே வழங்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி ஓவரில் பிராட் எவன்ஸ் விக்கெட்டை வீழ்த்திய அவர் ஹேட்ரிக் வாய்ப்பை நெருங்கினார், ஆனால் அறிமுக வீரர் நியூமேன் நியாம்ஹூரி அதைத் தடுத்தார்.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 டி20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் வெற்றி பாதைக்கு இந்திய அணி திரும்ப போராடும்.


Click it and Unblock the Notifications

