ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்த முதல் போட்டி ஜிம்பாப்வேவில் உள்ள ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதே மைதானத்தில் தான் இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த நிலையில், இந்த மைதானத்தின் பிட்ச் எப்படி இருக்கும் என்ற கணிப்பு வெளியாகி உள்ளது. ஹராரே மைதானத்தின் பிட்ச் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் சரிசமமாக ஒத்துழைப்பு அளிக்கும் என கூறப்படுகிறது.

இந்த தொடரின் போட்டிகள் ஜிம்பாப்வே நேரப்படி மதியம் ஒரு மணிக்கு நடக்க இருப்பதால் அந்த நேரத்தில் வேகப் பந்துவீச்சுக்கு அதிக ஒத்துழைப்பு இருக்காது என கூறப்படுகிறது. அதே நேரம் மதிய நேரத்தில் பிட்ச் காய்ந்து இருக்கும் என்பதால் ஸ்பின் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரியான ஸ்கோர் 152 ஆகும். இரண்டாவது இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 133 ஆகும். மேலும், இந்த மைதானத்தில் நடந்த கடைசி 12 போட்டிகளில் ஐந்து முறை மட்டுமே ஸ்கோர் 150-ஐ தாண்டி உள்ளது. எனவே, முதலில் பேட்டிங் செய்யும் அணி 160 முதல் 180 ரன்கள் வரை சேர்த்தல் நல்ல ஸ்கோர் என கருதலாம்.
இந்திய அணியைப் பொறுத்த வரை சுழற் பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னோய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தங்கள் பந்துவீச்சில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். துவக்க வீரராக களமிறங்க உள்ள அபிஷேக் ஷர்மாவும் சில ஓவர்கள் சுழற் பந்துவீச்சு வீசக் கூடியவர் என்பதால் இவர்கள் மூவர் கையில் தான் இந்திய அணியின் வெற்றி, தோல்வி இருக்கும்.
இந்த பிட்ச்சில் தொடர்ந்து பவுண்டரி அடிக்க முடியாது என்பதால் பேட்ஸ்மேன்கள் பவர் பிளே ஓவர்கள் மற்றும் கடைசி நான்கு ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்க முயல வேண்டும். மிடில் ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் ஆட வேண்டும்.