ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மூத்த வீரர்கள் கொண்ட இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, டி20 அனுபவம் அதிகம் இல்லாத ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் பேசுகையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் 20 முதல் 30 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும் என இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டினார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவர் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசியதும் குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணி குறைவான ஸ்கோர் எடுத்த நிலையில் இந்தியா எப்படியும் வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால், அதற்கு மாறாக இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்த ஒரே வீரர் சுப்மன் கில் மட்டுமே. அவர் 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அடுத்து ஏழாவது வரிசை வீரரான வாஷிங்டன் சுந்தர் 34 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். ஆனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் சுந்தரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இந்தியா 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களால் ஒரு முறை கூட 30 ரன்களுக்கு கூட்டணி அமைக்க முடியவில்லை.
இந்த நிலையில் ரவி பிஷ்னோய் இது குறித்து பேசினார். "நாங்கள் பேட்டிங்கில் சரிவை சந்தித்தோம். சரியான பார்ட்னர்ஷிப் அமைக்காதது இந்த போட்டியில் மிகப்பெரிய வித்தியாசமாக இருந்தது. நாங்கள் 20 முதல் 30 ரன்கள் பார்ட்னர்ஷிப்களை அமைத்திருந்தால் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும்" என்றார்.
மேலும், "மூத்த வீரர்கள் (ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா) எங்கள் கைகளில் பொறுப்பை கொடுத்து இருக்கிறார்கள். இந்திய கொடியை மேலே பறக்க விடுவது எங்களது பொறுப்பு. அதற்காக நாங்கள் எங்களின் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்" என்றார் ரவி பிஷ்னோய்.