ஹராரே: இந்தியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது ஜிம்பாப்வே. இந்த நிலையில், ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, அடுத்த போட்டியில் உலக சாம்பியன் இந்தியா, சாம்பியன் அணியைப் போல ஆடும் என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சிறிய ஸ்கோரை வைத்துக் கொண்டே சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை 102 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

இதன் முடிவில் அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பேசினார். "இந்த வெற்றி எனக்கு உண்மையில் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம். இன்னும் எங்கள் வேலை முடியவில்லை. இது தொடரின் முதல் போட்டி தான். உலக சாம்பியன் அணி, உலக சாம்பியன் அணியை போலத்தான் ஆடுவார்கள். எனவே, நாங்கள் அடுத்த போட்டியில் எங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக வேண்டும்" என்றார்.
அடுத்து போட்டி நடந்த ஹராரே ஆடுகளத்தின் பிட்ச் மற்றும் ரசிகர்கள் ஆதரவு குறித்து பேசிய சிக்கந்தர் ராசா, "இது 116 ரன்கள் எடுக்கக்கூடிய பிட்ச் அல்ல. எனவே, இரு அணிகளின் பந்துவீச்சாளர்களையும் தான் நாம் பாராட்ட வேண்டும். 115 ரன்கள் என்பது அதிக ஸ்கோர் அல்ல. ஆனால், நான் போட்டியின் முடிவை பற்றி கவலைப்படவில்லை. போட்டிகளில் போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் ஒரேடியாக சரிந்து, தோற்க விரும்பவில்லை." என்றார்.
மேலும், "நாங்கள் ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால், எல்லாம் கச்சிதமாக இருக்கவில்லை. சில தவறுகளை செய்தோம். இன்னும் முன்னேற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. ரசிகர்கள் எங்களுக்கு பெருமளவில் ஆதரவு அளித்து வருகிறார்கள். அதை நாங்கள் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் பயன்படுத்திக் கொள்வோம். இந்த ரசிகர்கள் எங்களை எப்போதும் விட்டு விட மாட்டார்கள்" என்றார் சிக்கந்தர் ராசா.