ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டனாக சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக அறிமுகமான சுப்மன் கில் சில மோசமான முடிவுகளை எடுத்தார். அதன் காரணமாக இந்திய அணி இந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை அடுத்து சுப்மன் கில் செய்த தவறுகள் பூதாகரமாக மாறி உள்ளன.
அதிக அனுபவம் இல்லாத வீரர்கள் கொண்ட ஜிம்பாப்வே அணியிடம் சர்வதேச அனுபவம் மற்றும் ஐபிஎல் அனுபவம் கொண்ட வீரர்களைக் கொண்ட இந்திய அணி தோற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டி நடந்த ஹராரே ஆடுகளத்தில் போட்டி நேரமான மதியத்தில் பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது என்ற கணிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதனால், முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் குவிக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் டாஸ் வென்ற சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதிக அனுபவம் இல்லாத ஜிம்பாப்வே அணியை இந்திய அணி எளிதாக சமாளித்து விடும் என்ற எண்ணத்தில் அவர் இவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், அது தவறாக அமைந்தது. இந்திய அணி ஜிம்பாப்வேவின் விக்கெட்களை சீரான இடைவெளியில் வீழ்த்திய போதும், அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் ஓவர்களை சரியாக நிர்வகித்து, சரியான பந்துவீச்சாளருக்கு ஓவர் அளிக்காமல் சொதப்பினார் சுப்மன் கில். உதாரணமாக, கடைசி 4 ஓவர்களில் முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தொடர்ந்து பந்து வீசி இருக்க வேண்டும். மாறாக 17 வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசி இருந்தார். முகேஷ் குமாருக்கு ஒரு ஓவர் மட்டுமே மீதமிருந்ததால் அவர் 19வது ஓவரை மட்டுமே வீசினார்.
அதே போல, கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரும் முதலில் பந்து வீசி விக்கெட்களை வீழ்த்திய நிலையில், நான்காவதாக விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் என்ற வகையில் ஆவேஷ் கான் அல்லது வாஷிங்டன் சுந்தரை பந்து வீச அழைத்து இருக்க வேண்டும்.
மாறாக பகுதிநேர சுழற் பந்துவீச்சாளரான அபிஷேக் ஷர்மாவை அழைத்தார் சுப்மன் கில். அவருக்கு தொடர்ந்து இரண்டு ஓவர்கள் அளித்தார். அதுவும் தவறாக அமைந்தது. அபிஷேக் ஷர்மா இரண்டு ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் மூலம் ஜிம்பாப்வே ஓரளவு நம்பிக்கை பெற்றது. இல்லை எனில் அந்த அணியால் 100 ரன்களை கூடத் தாண்டி இருக்க முடியாது.
ஜிம்பாவே அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறினர். ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம் ஆடியே பழக்கப்பட்ட இந்த இளம் வீரர்களுக்கு ஜிம்பாப்வே நாட்டில் உள்ள டெஸ்ட் போட்டி போன்ற மந்தமான பிட்ச்சில் எப்படி பேட்டிங் செய்வது என்பது தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.
சுப்மன் கில் 29 பந்துகளில் 31 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 34 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் பேட்டிங்கில் 16 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மின்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 102 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. சுபம்ன் கில் இனிவரும் நான்கு போட்டிகளிலாவது கேப்டனாக இது போன்ற தவறுகள் செய்யாமல் இருக்க வேண்டும்.