டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி தற்போது இளம் வீரர்களை கொண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் டி20 போட்டியில் தோல்வியை தழுவியது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி எந்த ஒரு இடைவெளியும் இன்றி மறுநாளான இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு இன்றைய ஆட்டம் ஹராராவில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு சுப்மன் கில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

116 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் இந்தியா தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களுக்கு உள்ளபடியே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் கில், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் இருந்தும் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனின் மாற்றம் நிகழ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில் அபிஷேக் ஷர்மா சிறப்பாக செயல்பட்டாலும், அவருக்கு இன்னும் போதிய பயிற்சியும் அனுபவமும் கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக திறமை வாய்ந்த தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
தோய்வான ஆடுகளங்களில் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பதில் வல்லவர். மேலும் விக்கெட்டுகள் இழந்தாலும் பொறுப்பான ஆட்டத்தை சாய் சுதர்சன் வெளிப்படுத்துவார். இதனால் அவருக்கு இரண்டாவது டி20 போட்டியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ருதுராஜ் ஐபிஎல் தொடரில் சிறப்பாகவும் இந்திய அணிக்காக விளையாடும் போது தடுமாறவும் செய்கின்றார்.
இதனால் அவர் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்திய டி20 உலக கோப்பையில் ரிங்கு சிங் இல்லை என்று ரசிகர்கள் சோகம் அடைந்த நிலையில் தற்போது அவரும் சொதப்பி இருப்பது ரசிகர்கள் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இதனால் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவின் ஸ்டார் வீரர்கள் தோல்விக்கு பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சு பொறுத்தவரை இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.