மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த டி20 தொடருடன் இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தனது பயணத்தை தொடங்கவுள்ளார். ஏற்கனவே கேகேஆர் அணிக்கு ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார் கவுதம் கம்பீர்.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி கவுதம் கம்பீர் தலைமையில் 2 கோப்பைகளை வென்ற நிலையில், இவர் ஆலோசகராக வந்த போது 3வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வருவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிய போதே, கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து முழுமையாக விலகினார்.

இதன் மூலமாகவே இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு கவுதம் கம்பீர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். புதிய பயிற்சியாளர் ஒரு அணிக்கு பொறுப்பேற்கும் போது, புதிய ஐடியாக்களுடன் வருவார்கள். புதிய அணுகுமுறை, புதிய ஸ்டைல் ஆகியவற்றுடன் புதிய வீரர்களையும் அணிக்குள் கொண்டு வருவார்கள்.
அந்த வகையில் கவுதம் கம்பீர் கொல்கத்தா அணியில் இருந்து 3 வீரர்களை இந்திய அணிக்கு கட்டாயம் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டி20 அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கவுதம் கம்பீர் பொறுப்புக்கு வந்த பின் விராட் கோலியின் இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க வருண் சக்கரவர்த்தி போராடி வருகிறார். ஆனால் வருண் சக்கரவர்த்தியை பெயரளவிற்கு கூட இந்திய அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கவுதம் கம்பீர் எப்போதும் சுனில் நரைன் பாணியிலான ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.
இதனால் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இளம் வீரர் ஹர்சித் ராணா கேகேஆர் அணியின் புதிய நட்சத்திரமாக உருவாகியுள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்கு தேர்வாகிய அவருக்கு, கவுதம் கம்பீர் பதவிக் காலத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.