ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் கடைசி மூன்று போட்டிகளுக்கான அணியில் சஞ்சு சாம்சனிடம் பெற்றுள்ளார். அவர் 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்று இருந்தார். அந்த தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி வரை வாட்டர் பாய் வேலையை மட்டுமே செய்தார்.
இந்த நிலையில், அவருக்கு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனிடையே உலகக் கோப்பை முடிந்து இந்தியா வர தாமதமானதால் ஜிம்பாப்வே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் இடம் பெறவில்லை. தற்போது கடைசி மூன்று போட்டிகளுக்கான அணியில் அவர் இடம் பெற்று இருக்கிறார். அந்த மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் நிச்சயம் வாய்ப்பு பெறுவார் என பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.

அதே சமயம், இது வெறும் கண்துடைப்புதான் என விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது முக்கியத்துவமற்ற இந்த ஜிம்பாப்வே டி20 தொடரில் சஞ்சு சங்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அடுத்து இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் சஞ்சுவுக்கு இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே.
ஏனெனில், அப்போது ரிஷப் பண்ட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெற்று இருப்பார். அடுத்து இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராக உள்ளதால் அதற்கு ரிஷப் பண்ட்டை தான் இந்திய அணியின் தேர்வுக் குழு முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, சஞ்சு சாம்சன் வரும் காலத்தில் இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டி அணியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் கூறுகிறார்கள். ஒருவேளை ரிஷப் பண்ட் ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ, அவரால் ஆட முடியாத நிலை ஏற்பட்டாலோ சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஒரு நாள் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதனிடையே துருவ் ஜுரேல், இஷான் கிஷன் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களையும் போட்டிகளில் ஆடவைத்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளது பிசிசிஐ. அவர்களும் சஞ்சு சாம்சனுக்கு போட்டியாக இருப்பார்கள்.