ஹராரே: 2024 டி20 உலகக் கோப்பையிலும், தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே டி20 தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்து இருக்கிறது. இந்த போட்டியிலும் அந்த விமர்சனம் தொடர்ந்தது. பின்னர் சிவம் துபே இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி சிஎஸ்கே அணியின் பெயரை காப்பாற்றினார். அப்படி என்னதான் நடந்தது?
2024 டி20 உலகக் கோப்பை அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே இடம் பெற்று இருந்தனர். இதில் ரவீந்திர ஜடேஜாவுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சில வாய்ப்புகளிலும் அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மறுபுறம் சிவம் துபே பேட்டிங்கில் ஐந்தாம் வரிசையில் களமிறங்கி குரூப் சுற்றில் படுமோசமாக ஆடி இருந்தார். சூப்பர் 8 சுற்றிலும் ஒரு போட்டியைத் தவிர மற்ற போட்டிகளில் அவரால் பந்துகளை சரியாக கணித்து ஆட முடியவில்லை. அப்படி ஒரு திணறல் ஆட்டத்தை ஆடி இருந்தார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அதிரடி ஆட்டம் ஆடியதால் தப்பினார்.

அடுத்து ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் சிஎஸ்கே அணியை சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட், துஷார் தேஷ்பாண்டே மற்றும் சிவம் துபே ஆகிய மூன்று வீரர்கள் இடம் பெற்றனர். இவர்களில் ருதுராஜ் கெய்க்வாட் முதல் போட்டியில் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதனால், கடும் விமர்சனம் எழுந்தது.
இரண்டாவது போட்டியில் 77 ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனத்திற்கு முடிவு கட்டினார். இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சிவம் துபே மற்றும் துஷார் தேஷ்பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போதே இணையத்தில் ரசிகர்கள் சிஎஸ்கே வீரர்களை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது. அவர்கள் சரியாக ஆட மாட்டார்கள் என்ற விமர்சனத்தை முன் வைத்தனர்.
அவர்கள் கூறியது போலவே துஷார் தேஷ்பாண்டே மூன்று ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு கேட்ச்சை தவற விட்டார். அதனால் மீண்டும் ரசிகர்கள் சிஎஸ்கே அணியை தாக்கி விமர்சனம் செய்யத் துவங்கினர். இந்த நிலையில், சிவம் துபேவுக்கு ஆறாவது பந்துவீச்சாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் தான் வீசிய இரண்டு ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஜிம்பாப்வே அணியின் 2வது விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
அவரது சிறப்பான செயல்பாட்டால் சிஎஸ்கே அணியின் மீதான விமர்சனம் ஓரளவு அடங்கியது. இந்த போட்டியில் 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.2 ஓவர்களிலேயே அந்த இலக்கை எட்டியது. துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 93 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.