ஹராரே : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு அபிஷேக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார். ஹராரேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த அணி விளையாடியது. ஜெய்ஸ்வால் இரண்டு சிக்ஸர்கள் விளாசி 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் சிக்கந்தர் ராசா பவுலிங்கில் போல்ட் ஆனார்.

இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் அபிஷேக் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க முயற்சித்தனர். குறிப்பாக அபிஷேக் ஷர்மா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நிலையில் அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. இந்த நிலையில் பவர் பிளேவில் அதிரடியாக ஆடி வேகமாக ரகளை சேர்க்க அபிஷேக் ஷர்மா ஆர்வம் காட்டினார்.
ஜிம்பாப்வே அணியில் திறமை வாய்ந்த பவுலரான பிளசிங் முசாராபாணி பந்தில் அபிஷேக் ஷர்மா அதிரடி காட்ட முயற்சித்தார். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் இரண்டாவது பந்தில் அபிஷேக் ஷர்மா ஆக்ரோஷமாக அடிக்க அதனை ஜிம்பாப்வே வீரர் கேம்ப்பேல் தவற விட அது பௌண்டரிக்கு சென்றது. எனினும் அந்த ஓவரின் கொஞ்சம் பொறுமை காத்திருந்து ரன்களை சேர்த்து இருந்தால் இன்றைய ஆட்டத்திலும் அபிஷேக் பெரிய ஸ்கோர் அடித்திருக்கலாம்.
ஆனால் அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் இறங்கி வந்து பேட்டை சுற்றினார். அப்போது அது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. வேகமாக விளையாடுகிறேன் என்ற பெயரில் விவேகத்தை இழந்து அபிஷேக் ஷர்மா விளையாடுவது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இன்றைய ஆட்டத்தில் ஆடுகளத்தில் பந்தில் பவுன்ஸ் மற்றும் பந்தில் Movement -ம் இருந்தது.
இதற்கு ஏற்றார்போல் இந்திய அணி வீரர்கள் விளையாடாமல் அதிரடி காட்டுகிறேன் என்ற பெயரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர். இந்த மாதிரி சூழலில் ருதுராஜ் களத்தில் இருந்திருந்தால் அவர் நிச்சயம் அணியை காப்பாற்றி இருப்பார். ஆனால் தேவையில்லாமல் ருதுராஜ் அணியை விட்டு நீக்கி தற்போது கில் தவறு செய்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.