ஹராரே: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஆடி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி இன்று (ஜூலை 14) நடைபெற உள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
மற்ற மூன்று போட்டிகளிலும் துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் வரிசையின் முதல் நான்கு இடங்களையும் பிடித்துக் கொண்டு அதிக ரன்கள் குவித்தனர். இரண்டாவது போட்டியில் துவக்க வீரர் அபிஷேக் சர்மா சதம் அடித்தார். மூன்றாம் வரிசையில் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நான்காம் வரிசையில் ஆடிய ரிங்கு சிங் கடைசி வரை நின்று அதிரடியாக ரன் சேர்த்து இருந்தனர்.

அடுத்த மூன்றாவது போட்டியில் முதல் நான்கு இடங்களிலும் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில், அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பெரும்பாலான பந்துகளை சந்தித்தனர். ஐந்தாம் வரிசை வீரரான சஞ்சு சாம்சன் மற்றும் ஆறாம் வரிசையில் இறங்கிய ரிங்கு சிங் மொத்தமாக எட்டு பந்துகளை மட்டுமே சந்தித்து இருந்தனர்.
நான்காவது டி20 போட்டியில் துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் கடைசி வரை நின்று சேஸிங்கை முடித்தனர். முதல் நான்கு போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு முதல் போட்டி தவிர மற்ற மூன்று போட்டிகளில் பேட்டிங் செய்ய பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ரிங்கு சிங்கிற்கு மட்டும் மூன்றாவது போட்டியில் சிறிய வாய்ப்பு கிடைத்தது. சஞ்சு சாம்சன், சிவம் துபே ஆகியோர் அணியில் இருந்தும் பேட்டிங் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேல்-க்கு கடைசி இரண்டு போட்டிகளில் பிளேயிங் லெவனிலேயே இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இந்த நான்கு வீரர்களும் ஐந்தாவது போட்டியிலாவது தங்களுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்குமா? என ஏக்கத்துடன் உள்ளனர்.
தற்போது ஐந்தாவது போட்டியில் துவக்க வீரர்கள் நால்வரில் இருவரை வெளியேற்றி விட்டு ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேலுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.