ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுகமான இளம் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் ஓவரிலேயே அட்டாக் செய்ய முயன்று விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால், இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 482 ரன்களை விளாசினார். அதுமட்டுமல்லாமல் பார்ட் டைம் ஸ்பின்னராகவும் சிறப்பாக செயல்பட்டதால், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் நீண்ட கால நண்பர் என்பதால் அபிஷேக் சர்மாவுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப நேற்று தொடக்க வீரர்களாக நானும், அபிஷேக் சர்மாவும் களமிறங்குகிறோம் என்று சுப்மன் கில் அறிவித்தார். பஞ்சாப் அணிக்காக இருவரும் நீண்ட ஆண்டுகளாக தொடக்கம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா அறிமுகமானார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்தது. பவுலிங்கின் போது 2 ஓவர்களை வீசிய அபிஷேக் சர்மா 17 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.
இதன்பின் 116 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. பென்னட் வீசிய முதல் ஓவரின் 3 பந்துகளை நிதானமாக ஆடிய அபிஷேக் சர்மா, உடலை நோக்கி வீசப்படும் பந்துக்காக காத்திருந்தார். இதனையறிந்த பென்னட் டீப் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டரை நிறுத்தி 4வது பந்தை உடலை நோக்கி வீசினார்.
இதற்காகவே காத்திருந்த அபிஷேக் சர்மா முதல் ரன்னை சிக்சர் மூலம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பேட்டை வீசினார். அந்த பந்து நேராக டீப் மிட் விக்கெட் திசையில் நிறுத்தப்பட்டிருந்த மசகட்ஷா கைகளில் சென்று விழுந்தது. இதன் காரணமாக அறிமுகப் போட்டியிலேயே டக் அவுட்டாகிய அபிஷேக் சர்மா பரிதாபமாக வெளியேறினார்.