சென்னை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலககோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்தியா 256/4 ரன்கள் குவித்து என்ற புதிய சாதனை படைத்துள்ளது. அபிஷேக் சர்மா 55 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா கூட்டணியின் அதிரடி ஆட்டம், இந்திய அணிக்கு அபாரமான பினிஷிங்கை உறுதி செய்தது.
இந்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மா மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து அசத்தினார். முன்னதாக, இத்தொடரின் தொடக்கத்தில் மூன்று முறை அடுத்தடுத்து டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த அபிஷேக், இந்த முறை சிறப்பான பங்களிப்பை வழங்கினார். சஞ்சு சாம்சனுடன் இணைந்து 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தினார்.

அரை சதம் அடித்தது குறித்து பேசிய அபிஷேக், "அணிக்குப் பங்களிப்பது எப்போதும் மகிழ்ச்சியே. இந்த ஒரு தருணத்திற்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். அது தற்போது சாத்தியமாகியிருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்ட அவர், தனது இரண்டாவது சிறந்த அரை சதமாக இருந்தபோதிலும், இது தான் திட்டமிட்டபடி இல்லை என்பதையும் வெளிப்படுத்தினார்.
"இது வேண்டுமென்றே செய்ததல்ல. நான் களத்தில் சிறிது நேரம் செலவிட விரும்பினேன், ஏனெனில் இந்தத் தொடரில் நான் 10-12 பந்துகளைக் கூட விளையாடியதில்லை. அதனால் கொஞ்ச நேரம் நிலைத்து ஆடினால் போதும் என்று நினைத்தேன். இவ்வளவு காலம் என்னை ஆதரித்த அணிக்கு ஒரு சிறப்பு நன்றி" என்று தெரிவித்தார். ரன்கள் எடுக்காத போதும், அணி தன்னைக் கைவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பயிற்சியிலும், ஹோட்டல்களிலும் கூட, என் அணி வீரர்கள் இந்த தருணத்திற்காக காத்திருந்தனர். 'நீ இதை முன்பும் செய்திருக்கிறாய், உனக்கான நேரம் வெகு தொலைவில் இல்லை, நம்பிக்கை கொள்' என்று தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்கள். அதுதான் தற்போது நடந்துள்ளது" என்றும் அபிஷேக் பெருமையுடன் தெரிவித்தார்.
இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் விரைவாக ரன்களைச் சேர்த்தனர். இதன் பின்னர், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, அணியின் ஸ்கோரை மேலும் வலுப்படுத்தினார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பதிவான இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
திலக் வர்மா வெறும் 14 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாண்டியாவுடன் இணைந்து இவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 84 ரன்களை வெறும் 31 பந்துகளில் சேர்த்து, ஆட்டத்தை ஒரு அபாரமான முடிவுக்குக் கொண்டு சென்றனர்.
ஆட்டத்தின் கடைசிப் பகுதி ஒரு வீடியோ கேம் போல் தோன்றியதா என்று கேட்கப்பட்டபோது, அபிஷேக், "நிச்சயமாக, அவர்கள் ஆட்டத்தை முடித்த விதம், எங்கள் அணியின் இலக்கு மீண்டும் வந்துவிட்டதாக உணர்கிறேன். கடந்த ஆண்டு முழுவதும் நாங்கள் விளையாடிய விதமும் அதுதான். நேற்று பேட்டிங் யூனிட்டாக நாங்கள் எடுத்த முடிவு இதுதான். போதுமான பந்துகளை எதிர்கொண்டதாக உணர்ந்தால் வெளிப்படையாகப் பேட் செய்ய வேண்டும்" என்றார்.

"இதுவரை நன்றாகப் போகவில்லை என்றாலும், நேற்று மற்றும் அதற்கு முந்தைய நாள் பயிற்சியில் நாங்கள் செய்த திட்டமும் இதுதான். ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு பேட்டிங் யூனிட்டாக, நாங்கள் களத்தில் எங்களை வெளிப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு முழுவதும் நாங்கள் இப்படித்தான் விளையாடினோம், ஒருவருக்கொருவர் இப்படித்தான் ஆதரவளிப்போம்" என்று அவர் கூறினார்.