ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அபாரமாக விளையாடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் அபிஷேக் சர்மா. அறிமுகப் போட்டியிலேயே டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்திருந்த அபிஷேக் சர்மா, 2வது போட்டியில் சதம் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ஐபிஎல் தொடரிலேயே ஐதராபாத் அணிக்காக அதிரடி தொடக்கம் கொடுத்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் அபிஷேக் சர்மா. ஆட்டமிழப்பதை பற்றி கவலைப்படாமல் டி20 கிரிக்கெட்டை இந்த ஸ்டைலில் தான் விளையாட வேண்டும் என்று அபிஷேக் சர்மா ஆடிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. இதனால் இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் இந்திய அணிக்காக விளையாடிய 2வது இன்னிங்ஸிலேயே தனது முதல் டி20 கிரிக்கெட் சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார். ரோகித் சர்மா விட்டுச் சென்ற இடத்தை அபிஷேக் சர்மா பிடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இவர் சதம் விளாசிய போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓய்வறையில் எழுந்து நின்று கைகளை தட்டி பாராட்டினார்.
இந்த நிலையில் சதமடித்தது எப்படி என்ற சீக்ரெட்டை அபிஷேக் சர்மா வெளியிட்டுள்ளார். அதில், இன்றைய இன்னிங்ஸை சுப்மன் கில் பேட்டில் தான் விளையாடினேன். இதற்கு முன்பாகவும் கில் பேட்டில் விளையாடி இருக்கிறேன். எப்போதெல்லாம் ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போதெல்லாம் அவரின் பேட்டில் தான் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில அணிக்காக இருவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடி வருகின்றனர். நீண்ட ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கும் இவர்கள் இருவரின் நட்பும், ஐபிஎல் தொடரின் போதே ஏராளமான முறை வெளிப்பட்டுள்ளது. கடந்த சீசனின் போது சுப்மன் கில் பேட்டை அபிஷேக் சர்மா யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்ற வீடியோ ட்ரெண்டானது.
அதேபோல் இருவரும் யுவராஜ் சிங்கின் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தவர்கள். யுவராஜ் சிங் அகாடமியில் விளையாடிய போது, இருவரின் நட்பும் அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. இதன் காரணமாகவே அபிஷேக் சர்மா சதம் விளாசிய போது சுப்மன் கில் அதீத மகிழ்ச்சியுடன் கைகளை தட்டி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.