மும்பை : இந்திய டி20 கிரிக்கெட் அணியிலிருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது இளம் வீரர்கள் அதிக அளவு டி20 அணியில் இடம் பெறப்போகிறார்கள். மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்கள் 5 பேர் மிகச்சிறந்த ஒரு இடத்திற்கு வருவார்கள் என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவான் ஆன்ட்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் ஒரு ஐபிஎல் பயிற்சியாளர் என்ற முறையில் நான் சில வீரர்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றேன்.

ஜெய்ஸ்வால் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் அவர் ஒரு சிறந்த வீரராக இருக்கின்றார். இதேபோன்று கடந்த ஐபிஎல் தொடரில் கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் அவர் ஒரு அறிவுபூர்வமான வீரராக இருக்கின்றார். விராட் கோலி போல் கில் விளையாடுகின்றார்.
இதேபோல் அபிஷேக் ஷர்மா எவ்வாறு விளையாடப் போகிறார் என்பதை காண நான் ஆவலுடன் இருக்கின்றேன். இதேபோன்று துருவ் ஜூரல் பேட்டிங் எனக்கு பிடித்திருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினாராம் ரியான் பராக் போன்ற திறமை வாய்ந்த வீரர் சர்வதேச கிரிக்கெட்டிற்கு நிச்சயம் தேவை. விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை.

எனக்கு முதலில் இது ஆச்சரியமாக தான் இருந்தது. ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் கடந்த ஆண்டு ஆர் சி பி உடன் பணியாற்றியபோது அவர் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். விராட் கோலி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் அதிக மரியாதை இருக்கின்றது. ஒரு பயிற்சியாளராக எனக்கும் கேப்டன் டுபிளசிஸ்க்கும் விராட் கோலி தன்னுடைய ஆதரவை வழங்கினார். இன்னும் சொல்லப்போனால் விராட் கோலி அனைவருக்குமான ரோல் மாடல், தொழில் முறை கிரிக்கெட் வீரர் எப்படி இருக்க வேண்டும் என்று அவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
விராட் கோலி ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்வார். எனினும் ரோபோட் இருக்க மாட்டார். சிரிப்பார், வாழ்க்கையை அனுபவிப்பார், மற்ற வீரர்கள் கிண்டல் செய்வார் ஒரு அணியாக எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். இளம் வீரர்கள் விராட் கோலியை எளிதாக தொடர்பு கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் விராட் கோலிக்கு நல்ல கிரிக்கெட் அறிவு இருக்கின்றது.

சில விஷயங்களை அனைவருக்கும் அப்பாற்பட்டு யோசிப்பார். தற்போது இந்திய அணியில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மாற்று வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு மிகவும் பலமாக இருக்கின்றது. இதனால் சீனியர்கள் ஓய்வு பெற்று விட்டார்களே என்று பயம் நிச்சயம் தேவையில்லை. ஏனென்றால் இந்தியா தொடர்ந்து சிறந்த வீரர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.
ஒருவர் ஓய்வு பெற்றால் அவர் இடத்திற்கு எப்படியாவது ஒரு சிறந்த வீரர் கிடைத்து விடுவார். ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறும்போது அவரை மாற்றுவது கடினம் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் மக்கள் உடனடியாக மாறிவிடுவார்கள். அடுத்த திறமையான வீரர் யார் என்பது நோக்கி தான் அனைவரும் கண்களும் செல்லும் என்று ஆண்டி ஃபிளவர் கூறியுள்ளார்.