மும்பை: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக யார் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே பவுலிங் பயிற்சியாளருக்கான போட்டியில் தமிழக ஜாம்பவான் பெயர் இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதன்பின் அடுத்த பயிற்சியாளராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

பயிற்சியாளருக்கான நேர்காணலில் யார் யார் பங்கேற்றார்கள் என்பது கூட அறிவிக்கப்படாமல், புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர், பவுலிங் பயிற்சியாளராக வினய் குமார் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலிப் ஆகியோர் இருக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியது.
ஆனால் பவுலிங் பயிற்சியாளருக்கான ரேசில் உள்ள வினய் குமாருக்கு பிசிசிஐ ஆதரவளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பவுலிங் பயிற்சியாளருக்கான ரேசில் கிரிக்கெட் ஜாம்பவான் ஜாகீர் கான் மற்றும் பாலாஜி ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக ஜாகீர் கான் செயல்பட்டு வருகிறார்.
அதேபோல் தமிழக வீரர் பாலாஜி, ஏற்கனவே சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு மைதானங்கள் குறித்து நல்ல தெளிவுடன் இருப்பவர். கேகேஆர் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் செயல்பட்ட போது, பாலாஜி முக்கிய வீரராக இருந்தவர். அதேபோல் ஜாகீர் கானுடன் கம்பீருக்கு நல்ல நட்பு உள்ளது.
இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதில் கம்பீரின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும், ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்பின் செயல்பாடுகள் கம்பீருக்கு நிறைவளித்திருப்பதால், அவருடன் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.