மணிக்கு 154 கிமீ வேகத்தில் பந்துவீசிய அசோக் சர்மா.. ஜிம்பாப்வே தொடரில் சாதிப்பாரா? சிராஜ் குறித்து நெகிழ்ச்சி
மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் பந்துவீச்சில் அசத்தி கவனம் ஈர்த்த இளம் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா, தனது பந்துவீச்சு வளர்ச்சிக்கு இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் எவ்வாறு உதவினார் என்று தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக், குஜராத் டைட்டன்ஸ் அணியில் சிராஜுடன் கழித்த நாட்கள் தன்னுடைய பந்துவீச்சு நுணுக்கங்களை மாற்றியமைக்க உதவியதாகக் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கான தனது முதல் சர்வதேச பயணத்திற்கு தயாராகி வரும் அசோக், சிராஜுடன் பயிற்சி செய்த நாட்களை நினைவுகூர்ந்தார். அப்போது அவரிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற எத்தகைய வாய்ப்புகளையும் நழுவவிட்டதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "நான் சிராஜ் பாயுடன் நிறைய விஷயங்கள் பேசுவேன். நாங்கள் ஓய்வறை அல்லது மைதானத்தில் பயிற்சி செய்யும்போது அவரிடம் பந்துவீச்சு குறித்து தொடர்ந்து கேள்விகள் கேட்பேன். 'பையா, நீங்கள் ஒரு போட்டியில் விளையாடும்போது எத்தகைய அழுத்தத்தை எதிர்கொள்கிறீர்கள்? ஒரு பந்தை வீசுவதற்கு முன்பு உங்களது திட்டமிடல் என்னவாக இருக்கும்?"
"ஒரு பேட்டரை வீழ்த்த எப்படி வியூகம் அமைக்க வேண்டும்?' போன்ற பல விஷயங்களை அவரிடம் விவாதித்துள்ளேன். சிராஜ் பாய் எனக்கு எல்லாவற்றையும் தெளிவாக விளக்குவார். என்னுடன் நின்று நான் வீசும் இரண்டு மூன்று பந்துகளை உற்று கவனிப்பார். பின்னர், 'இதைச் செய், இந்த மாற்றத்தை முயன்று பார்' என்று அறிவுரை கூறுவார். அவரிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இப்போதும் ஜெய்ப்பூரில் பயிற்சி செய்யும்போது, சிராஜ் பாய் சொன்ன ஆலோசனைகளை மனதில் வைத்தே மேலும் சிறப்பாகச் செயல்பட முயல்கிறேன்" என்று அசோக் சர்மா கூறினார்.
2025 ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.90 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட அசோக் சர்மா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே 154.2 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஐபிஎல் 2026 சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடி, 2/32 என்ற சிறந்த பந்துவீச்சுடன் 6 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இந்த சிறப்பான செயல்பாடே அவருக்கு இந்திய அணியின் கதவைத் திறந்துவிட்டுள்ளது.
சிராஜ் தவிர, மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் தனது ஆட்டத்தை மேம்படுத்த உதவியதாக அசோக் குறிப்பிட்டார். "நான் குஜராத் டைட்டன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்தபோது, இஷாந்த் சர்மா பாய் அங்கு நின்றுகொண்டிருந்தார். அப்போது எனது அண்மைய ரஞ்சி கோப்பை செயல்பாடு பற்றிக் கேட்டார். நான் 4 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகக் கூறினேன்.
அதற்கு அவர், 'அனைத்தும் சரியாகவே இருக்கிறது. உனது பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. ஆனால் நீ உன்னுடைய பந்தின் லென்த் பகுதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால், இந்த 4 போட்டிகளில் எடுத்த 16 விக்கெட்டுகள் எளிதாக 24 விக்கெட்டுகளாக மாறும்' என்றார்."
"இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு ஜாம்பவான் கொடுத்த இந்த நல்ல அறிவுரை என் மனதில் ஆழமாகப் பதிந்தது. சரியான பகுதியில் செய்யப்படும் சிறிய மாற்றங்கள் கூட பந்துவீச்சில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அது எனக்கு உணர்த்தியது" என்று அசோக் சர்மா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

