ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் இதே தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசினார்.
அப்போது இரண்டாவது போட்டியில் வெற்றிக்கு என்ன காரணம்?, எப்படி தோல்வியிலிருந்து இந்திய அணி மீண்டது? என்பது குறித்து அவர் விளக்கம் அளித்தார். முதல் போட்டியில் அழுத்தத்தை சரியாக கையாளவில்லை எனவும், இந்தப் போட்டியில் அதை சரியாக செய்ததால் வென்றதாக குறிப்பிட்டார். மேலும், அபிஷேக் சர்மா - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி கடினமான சூழலில் பேட்டிங் செய்தது குறித்தும் பேசினார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்து இருந்தது. அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் 100 ரன்களும்., ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்களும் குவித்திருந்தனர். ரிங்கு சிங் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 134 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது குறித்து பேசிய சுப்மன் கில், "நாங்கள் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. பவர் பிளே ஓவர்களில் பேட்டிங் செய்வதற்கு அத்தனை எளிதாக இல்லை. பந்து ஸ்விங் ஆனது. எனினும், அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தங்களின் கூட்டணியை சிறப்பாக கட்டமைத்தனர்." என்றார்.
அடுத்து முதல் போட்டியின் தோல்வி குறித்தும், இந்தப் போட்டியில் வெற்றிக்கான காரணம் குறித்தும் பேசினார் சுப்மன் கில். "நேற்றைய போட்டியில் எங்களால் அழுத்தத்தை சரியாக கையாள முடியவில்லை. அது எங்களது முதல் போட்டி. ஆனால், இந்த போட்டியில் ஆடும் முன் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்து இருந்தது. அதனால், அழுத்தத்தை சிறப்பாக கையாண்டோம். இன்னும் மூன்று போட்டிகள் இருக்கிறது. அதில் வெற்றி பெற முயற்சி செய்வோம்" என்றார் சுப்மன் கில்.