ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் சுப்மன் கில் பேசியுள்ளார். தோல்விக்கு காரணம் பேட்ஸ்மேன்களே என்றும், கடைசி வரை நானே களத்தில் நின்று ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும் என்றும் பொறுப்பேற்றுள்ளார்.
டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரு வாரத்தில், ஜிம்பாப்வே அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.

22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போதே, போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கைகள் ஓங்கியது. அதன்பின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் எந்த தவறையும் செய்யாமல் ஜிம்பாப்வே வீரர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், நாங்கள் நன்றாக பவுலிங் செய்தோம் என்றே நினைக்கிறேன். ஆனால் ஃபீல்டிங்கில் செய்த தவறுகள் எங்களுக்கு பின்னடைவை கொடுத்தது. எங்களின் தரத்திற்கு ஏற்ப ஃபீல்டிங்கில் ஈடுபடவில்லை. களத்தில் போதுமான நேரம் எடுத்து கொண்டு பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்கலாம் என்று பேசி இருந்தோம். அதனை சரியாக செய்ய முடியவில்லை.
இன்னிங்ஸின் பாதி நேரத்திலேயே 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். ஒருவேளை கடைசி வரை என்னால் பேட்டிங் செய்ய முடிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். நான் ஆட்டமிழந்ததை எண்ணி பார்த்தால், ஏமாற்றமாக உள்ளது. இந்த தோல்வியும் நான் நினைத்ததை போல் அமையவில்லை. 115 ரன்களை சேஸிங் செய்யும் போது நம்பிக்கையுடன் தொடங்கினோம்.
ஆனால் இந்த இலக்கை விரட்டும் போது, 10வது பேட்ஸ்மேன் களத்தில் இறங்கினால், நிச்சயம் தவறு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியின் கேப்டனாக முதல்முறையாக களமிறங்கிய சுப்மன் கில், முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளார். அடுத்த தலைமுறைக்கான வீரர் என்ற கொண்டாடப்படும் சுப்மன் கில், கேப்டன்சி திறமையை வளர்த்துக் கொள்ளவே இந்த டி20 தொடரில் தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.