சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணி இந்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி, புள்ளிப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை நிகர ரன் ரேட் அடிப்படையில் முந்துவதற்கு, இந்த வெற்றிகள் மிகப்பெரிய வித்தியாசத்தில் அமைய வேண்டியதும் அவசியமாகும்.
தற்போது குரூப் 1 பிரிவில் இந்திய அணியின் நிகர ரன் ரேட் -3.800 என்பதாகவும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிகர ரன் ரேட் 5.350 என்பதாகவும் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிகர ரன் ரேட்டை முந்துவதே இந்திய அணியை அரையிறுதி வாய்ப்புக்கு அருகே கொண்டு செல்லும்.

இந்தச் சூழ்நிலையில், இந்திய அணி தனது அடுத்த சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. வெற்றி பெற வேண்டும் என்பதைத் தாண்டி, மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு, சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையே தற்போது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
பொதுவாக, சிறிய எல்லைகளைக் கொண்ட அல்லது பேட்டிங்கிற்கு முழுமையாக ஒத்துழைக்கக்கூடிய ஆடுகளமாக இருந்தால், இந்திய பேட்டர்கள் முதலில் களமிறங்கி 200 ரன்களுக்கு மேல் எளிதாகக் குவித்துவிட முடியும். அல்லது, இலக்கை துரத்தும்போது அதிரடியாக விளையாடி மிகக் குறைந்த ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டிவிட முடியும். இதன் மூலம் அணியின் நிகர ரன் ரேட் பெரிய அளவில் உயரும்.
ஆனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை பவுண்டரி எல்லைகள் மிகவும் பெரியவை. மேலும், இங்குள்ள ஆடுகளம் பொதுவாகவே சுழற்பந்து வீச்சுக்கும், மிதவேகப் பந்துவீச்சுக்கும் சற்று சாதகமாகச் செயல்படும். பேட்டர்கள் வந்தவுடன் அதிரடியாக ஷாட்களை விளாசுவது இங்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பந்தின் தன்மையைப் புரிந்துகொண்டு நிதானமாகவே ரன் சேர்க்க முடியும்.
இத்தகைய மைதானத்தில் இந்திய அணியால் 200 ரன்களுக்கு மேல் அனாயசமாகக் குவிக்கவோ, அல்லது சேஸிங் செய்யும்போது மிக வேகமாக இலக்கை எட்டிப்பிடிக்கவோ முடியாது. ஆடுகளத்தின் தன்மை காரணமாக இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் இடையே சவாலான ஒன்றாகவே அமையும்.
ஒருவேளை இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 40 அல்லது 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலோ, அல்லது இலக்கை துரத்தும்போது 2 அல்லது 3 ஓவர்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றாலோ, அது இந்திய அணியின் நிகர ரன் ரேட்டைத் தேவையான அளவுக்கு உயர்த்தப் போதுமானதாக இருக்காது. வெஸ்ட் இண்டீஸ் அணியை ரன் ரேட் கணக்கில் பின்னுக்குத் தள்ள வேண்டுமானால், 100 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 10 முதல் 12 ஓவர்களுக்குள்ளாகவோ இந்திய அணி வெற்றி பெற வேண்டும்.
ஆனால், சேப்பாக்கம் மைதானத்தின் தற்போதைய நிலையில் அப்படி ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்வது கடினம் என்பதால், ரன் ரேட்டை உயர்த்த திட்டமிட்டிருந்த இந்திய அணிக்கு இது ஒரு எதிர்பாராத பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், குறைவான ரன்கள் அடிக்கக்கூடிய மைதானத்தில் எவ்வாறு ரன் ரேட்டை உயர்த்துவது என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஒரு வேளை இந்திய அணியால் பெரிய அளவில் நிகர ரன் ரேட்டை உயர்த்த முடியவில்லை என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவிடமும், இந்தியாவிடமும் தோற்க வேண்டும். அப்போது மட்டுமே இந்திய அணியால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
