ஹராரே: இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 49 ரன்கள் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதன் மூலமாக இந்திய டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் நிரந்தரமாகும் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுப்மன் கில் 49 பந்துகளில் 66 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 49 ரன்களும் விளாசினர்.

2வது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், 3வது டி20 போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் கடந்த 2 போட்டிகளிலும் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், இந்த போட்டியில் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறங்கி கடைசி ஓவர் வரை களத்தில் இருந்திருக்கிறார்.
டாப் ஆர்டர் மட்டுமல்லாமல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னால் விளையாட முடியும் என்று ருதுராஜ் கெய்க்வாட் தனது பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் இடத்தை பிடிக்க ஏராளமான பேட்ஸ்மேன்கள் போட்டியில் உள்ளனர். அதில் ஜெய்ஸ்வாலின் இடம் உறுதியாகியுள்ள நிலையில், மற்றொரு பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வியே உள்ளது.
இதன் காரணமாகவே ஜிம்பாப்வே டி20 தொடருக்கு 4 தொடக்க வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 4 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதும் அந்த ஒரு வீரரை கண்டுபிடிப்பதற்காக தான் என்பதும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடக்க வீரராக அசத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த டி20 தொடரில் மிடில் ஆர்டரிலும் மிரட்டி வருகிறார்.
ஸ்பின்னர்களை அநாயசமாக விளாசக் கூடிய திறமை ருதுராஜ் கெய்க்வாடிடம் இருப்பது கண்கூடாக தெரிகிறது. அதேபோல் 49 ரன்களில் பேட்டிங் ஆடிய போது, அரைசதம் அடிக்க முயற்சிக்காமல் சிக்சர், பவுண்டரி அடிக்க முயற்சித்து ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலமாக சுயநலமாக ஆடாமல், அணியின் வெற்றிக்காக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுவது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.